வெயிலுக்கு ஏற்ற முத்திரை!! (மகளிர் பக்கம்)
வெயில் காலம் தொடங்கி விட்டது. அதிக வெப்பம், தாகம் என்று பிரச்னைகள் கலந்து கட்டித் தாக்கும். இந்தச் சூழ்நிலையில், உடலைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே ஒரு முத்திரை செய்வது போதாது. எனவே, கோடையை சமாளிக்க உதவும் சில முத்திரைகளைப் பார்க்கலாம்.
நீர் முத்திரை: 10-20 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு 5 முறை செய்யலாம். அமர்ந்தோ, நடந்தோ, பயணத்தின் போதோ எந்த நிலையிலும் செய்யலாம்.
பலன்கள் : நாவறட்சி, தொண்டைவறட்சி, தாகம், தண்ணீர் குடித்தும் தாகம் தீராத பிரச்னை, கூந்தல் வறட்சி, வெயிலால் ஏற்படும் சருமத் தொல்லைகள், சருமம் கருத்துப் போதல், அரிப்பு, வியர்க்குரு, நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல், உடற்சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி சரியாகும். வெயிலில் விளையாடுவோர், நடப்போர் இந்த முத்திரையைச் செய்து வருவது நல்லது.
வியான முத்திரை: 10 நிமிடங் கள் வரை ஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம். காலை, மாலையில் சப்பளாங்கால் இட்டோ, நாற்காலியில் பாதங்கள் தரையில் படியும் படி அமர்ந்தோ செய்ய வேண்டும்.
பலன்கள் : சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்றுப் போக்கு, அதீதத்தூக்க உணர்வு, வயிற்றுக் கடுப்பு, தலை சுற்றல், மயக்கம், வெயிலால் ஏற்படும் பக்கவாதம், வயதானோர் வெயிலைச் சமாளிக்க முடியாமல் போவது, படபடப்பு, ரத்தக் கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் சரியாகும்.
லபதி முத்திரை: 10 நிமிடங்கள் வரை மாலை மற்றும் இரவு என இரண்டு முறை, அமர்ந்தோ, படுத்த நிலையிலோ செய்யவேண்டும்.
பலன்கள் : கண் சிவந்து போதல், கண்எரிச்சல், வெப்பமான மூச்சுக் காற்று, உதடு, நாக்கு, தொண்டை, வாயின் உட்பகுதியில் எரிச்சல், புண்கள், கொப்பளங்கள் வராமல் தடுக்கப்படும்.
அபான முத்திரை: 20 நிமிடங்கள் வரை இரவில் மட்டும் நிமிர்ந்து உட்கார்ந்து செய்ய வேண்டும்.
பலன்கள் : அபான முத்திரையால் உள்ளங்கை வியர்வை, மூலம், மூலச் சூடு, கடுப்பு, ரத்த மூலம் வராமல் தடுக்கலாம். வெயில் காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும். சிறிய கல் அடைப்புகள் நீங்கும்.
Average Rating