நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்த நடவடிக்கை!! (உலக செய்தி)
கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில், அதை சமாளிக்க கூடுதல் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா பரிசோதனை வசதியை விரிவுபடுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக, எய்ம்ஸ் உள்ளிட்ட 14 உயர் மருத்துவ நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நோய்த்தொற்று பரவுவதை தடுத்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் தொடர்பான நடவடிக்கைகளை நாம் தொடர வேண்டிய அவசியம் நிலவுகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கொரோன நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் இதுவே சிறந்த வழிமுறையாகும்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக மருத்துவமனைகள், தனிமை படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்தும் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் 601 பிரத்யேக மருத்துவமனைகளில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 980 தனிமை படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை மேலும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ராணுவ மருத்துவமனைகள், ரெயில்வே உள்ளிட்டவை அரசின் முயற்சிகளுக்கு பங்களித்து வருகின்றன. இதுவரை 5 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
கொரோனோ நோய்த் தொற்றுக்காக 40 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளை உருவாக்க ஆராய்ச்சி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating