அறிகுறிகள் இல்லாமலும் ஆபத்து வரும் ! (மருத்துவம்)

Read Time:9 Minute, 12 Second

சுகர் ஸ்மார்ட் தாஸ்

அம்மாவோ, மனைவியோ, நீங்களோ வீட்டிலேயே சமைத்த பாரம்பரிய உணவைச் சாப்பிடும் வரையில், உங்களுக்கு கொலஸ்ட்ரால் குறித்த பயம் இல்லை! நீரிழிவு பக்கவிளைவுகளின் காரணமாக பல்வேறுவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். குறிப்பிட்ட இடைவெளிகளில் மருத்துவ ஆலோசனை பெற்றுவரும் நிலையில், இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தாது. மருத்துவரே இப்பிரச்னைகளுக்கும் மருந்துகள் அளித்து, அபாயம் வரும்முன் காத்துவிடுவார். அதனால்தான் ஆரம்பநிலையிலேயே மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் இந்தப் பிரச்னைகள் நீரிழிவாளர்களுக்கு ஏற்படும்போது, இதயநோய்களும் ஸ்ட்ரோக்கும் தாக்கும் அபாயம் உண்டு. இவை தொடக்கத்திலேயே அறிகுறிகளைக் காட்டாது எனினும், மருத்துவர்களால் வரவிருக்கும் பிரச்னைகளை உணர்ந்துவிட முடியும். ஆகவே, மருத்துவர்கள் நீரிவுக்கான மருந்துகளைத் தாண்டி, கூடுதலாகப் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தயங்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரத்த ஓட்டத்தில் காணப்படுகிற மென்மையான, மெழுகுபோன்ற ஒருபொருள்தான் கொலஸ்ட்ரால். இப்படி, குருதிக்குழல்களில் படிந்துவிடக்கூடிய ஒருவித கொலஸ்ட்ராலையே, நாம் கெட்ட கொலஸ்ட்ரால் என்கிறோம். இந்த கொலஸ்ட்ரால் படிவு காரணமாக குருதிக்குழல்களின் சுற்றளவு குறைந்து போகும். இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதன் விளைவாக ஸ்ட்ரோக் அபாயம் ஏற்படும். அது மட்டுமல்ல…

இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் குருதிக்குழல்களில் கெட்ட கொழுப்பு படிதல் அதிகமாகும்போது, இதயத்தை ஆபத்துக்குள் தள்ளி, இதயநோய்களையும் வழங்கும். இது அனைத்து மக்களுக்குமே பொதுவானதுதான் என்றாலும், நீரிழிவாளர்களுக்கோ அபாயத்தின் அளவு மிக அதிகம். உயர் ரத்த அழுத்தமும் இதயநோய்களும் சட்டென தாக்கும். அதனால்தான் 6 மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆண்டுக்கு ஒரு முறையோ கொலஸ்ட்ரால் டெஸ்ட்(லிபிட் புரஃபைல்) எடுத்துக்கொள்ளும்படி நீரிழிவாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ரத்த அழுத்த சோதனை (பி.பி செக்அப்) மாதம் தோறும் அல்லது வாரம் தோறும் எடுக்கும்படியும் கூறப்படுகிறது. இனியாவது, நம் மருத்துவர் தேவையில்லாமல் டெஸ்ட்டுக்கு எழுதிக் கொடுக்கிறார், எக்ஸ்ட்ரா மாத்திரைகள் எழுதிக் கொடுக்கிறார் என்றெல்லாம் குழம்பவும் புலம்பவும் வேண்டாம். சில நீரிழிவாளர்கள் நிறைய மாத்திரைகள் எழுதிக்கொடுத்தால், மருத்துவரையே மாற்றிவிடுவதும் உண்டு. இந்தக் காரணத்தால், விஷயத்தைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஓரிரு மாத்திரைகளோடு நிறுத்திவிடுவது சில மருத்துவர்களின் வழக்கமாகிவிட்டது.

கொலஸ்ட்ரால் குறைக்கும் மாத்திரைகள்…கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகம் கொண்ட நீரிழிவாளர்களுக்கு முதலில் பரிந்துரைப்பது இதயத்துக்கு இதமான உணவுகளையே. இரண்டாவதாக முறையான உடற்பயிற்சி. மூன்றாவதாகவே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் மாத்திரைகள். இந்த மாத்திரைகள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும்படியே பரிந்துரைக்கப்படும். சோதனையில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்துவிட்டாலும் கூட, மருத்துவர் அறிவுறுத்தினால் தொடர்ச்சியாக உட்கொள்ளத்தான் வேண்டும்.

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஒற்றை மாத்திரையும் உண்டு. காம்பினேஷன் மாத்திரைகளும் உண்டு. நம் உடல்நலம், வாழ்க்கை முறைக்கு ஏற்ப இம்மாத்திரைகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும். ஒருவருக்கு அளிக்கப்படும் மாத்திரை இன்னொருவருக்கு அப்படியே பொருந்தாது. எல்.டி.எல் எனும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு பொதுவாக ஸ்டாட்டின் மாத்திரைகள் வழங்கப்படும். ஸ்டாட்டின் தெரபி என்று அழைக்கப்படும் இந்த முறையை உலகம் முழுக்கவே மருத்துவர்கள் தவறாது பின்பற்றுகிறார்கள். அதாவது…

கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வந்தாலும் கூட, நீரிழிவாளர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களோடு, ஸ்டாட்டின் தெரபியும் தொடரப்பட வேண்டும். வெளிப்படையான இதயநோய் கொண்டவர்களுக்கு ஸ்டாட்டின் தெரபி அவசியம். இதயநோய் இல்லாமல் இருந்தாலும், 40 வயது தாண்டி, இதய நோய்களுக்கான ஒரிரு அபாய காரணி கொண்டவர்களுக்கும் (நீரிழிவு போன்றவை) ஸ்டாட்டின் தெரபி தேவை.

இதயநோய் இல்லாமல் இருந்தாலும் கூட, 40 வயதுக்குள் இருந்தாலும் கூட, வாழ்க்கைமுறை மாற்றங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு 100mg/dl என்பதைத் தாண்டினாலும், இதயநோய்களுக்கான அபாய காரணிகள் ஒன்றுக்கு அதிகமாக இருந்தாலும், இதயநோய் இல்லாமல் இருந்தாலும் கூட, 40 வயதுக்கு குறைவானவர்களுக்கும் ஸ்டாட்டின் தெரபி தொடங்கப்பட வேண்டும். நீரிழிவாளர்களுக்கு ஏன் கொலஸ்ட்ரால் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது என இப்போது புரிகிறதா?

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள்…உயர் ரத்த அழுத்தமும் அறிகுறிகளைக் காட்டாது என்பதால், மருத்துவரைச் சந்திக்கும் மாதாந்திர/காலாந்திரத் திட்டத்தில் இதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே சோதித்துக் கொள்ளும் எளிதான பிபி மானிட்டர்களும் இப்போது கிடைக்கின்றன. பிபியை கண்டுகொள்ளாமல் விட்டாலோ, மருத்துவர் அளித்த மாத்திரைகளை உட்கொள்ளாமல் விட்டாலோ, அது பெரிய பிரச்னைகளுக்கு இட்டுச் செல்லும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக மருத்துவர்கள் ஒன்று அல்லது கூடுதலான மாத்திரைகளை அளிக்கக்கூடும். மருத்துவர் அறிவுறுத்திய படி அம்மாத்திரைகளை உட்கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும். ஏதேனும் பக்கவிளைவுகள் தோன்றினால், உடனே மருத்துவரிடம் கூறுங்கள். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ACE inhibitors, betablockers, diuretics வகை மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

ஸ்வீட் டேட்டா

மற்றவர்களைவிட நீரிழிவாளர்கள் இதயநோய்கள் அல்லது ஸ்ட்ரோக்குக்கு 2 முதல் 4 மடங்கு அதிக அபாயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். டைப் 2 நீரிழிவின் ஒரு பகுதியாகவே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதும், கன்னாபின்னா கொலஸ்ட்ரால் அளவு உண்டாவதும் நிகழ்கிறது. இதனால் இதய நோய்கள் எளிதில் தாக்குகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டயாபடீஸ் டயட்!! (மருத்துவம்)
Next post காமம் என்பது என்ன? (அவ்வப்போது கிளாமர்)