கை, கால் எரிச்சலை போக்கும் பாகற்காய் இலை!! (மருத்துவம்)
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். சர்க்கரை நோயால் நரம்பு முடிச்சுகளில் பாதிப்பு ஏற்பட்டு உணர்வு வராமல் தடுக்கப்படுகிறது. கை, கால்களில் எரிச்சல் ஏற்படுகிறது. வேப்பம் பூவை பயன்படுத்தி உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பம் பூ, கருஞ்சீரகம், மஞ்சள். ஒரு ஸ்பூன் வேப்பம் பூ, கால் ஸ்பூன் கருஞ்சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இதை வடிகட்டி அன்றாடம் 50 முதல் 100 மில்லி அளவுக்கு குடித்துவர நரம்பு முடிச்சுகளுக்கு பலம் ஏற்படும். எரிச்சல் இல்லாமல் போகும். உள் உறுப்புகள் பாதுகாக்கப்படும். பாகற்காய் இலையை பயன்படுத்தி கை, கால் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். பாகற்காய் இலை பசையை சுமார் அரை மணி நேரம் பூசி வைத்திருந்தால் உள்ளங்கை, கால்களில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பாகற்காய் இலைகள் பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்கும் தன்மை கொண்டது. குளிர்ச்சி தரக்கூடியது.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய், வெட்டிவேர் பொடி ஆகியவற்றை சம அளவு எடுக்கவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து பூசி வர கை, காலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு கை கால் வலி, உடல் சோர்வை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா சூரணத்துடன் சிறிது நீர்விட்டு நன்றாக கலக்கவும்.
இதனுடன் காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை இரவு தூங்கப்போகும் முன்பு குடித்துவர கை கால் வலி, உடல் சோர்வு நீங்கும். அஸ்வகந்தா சூரணம் அற்புதமான மருந்தாகிறது. மூட்டுக்களுக்கு பலத்தை தருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பல்வேறு சத்துக்கள் வெளியேறுவதால் உடல் சோர்வு ஏற்படும். சோர்வை போக்குவதில் அஸ்வகந்தா சூரணம் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடு வெடிப்பை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். மழை, பனி காலங்களில் உதட்டில் வெடிப்பு ஏற்படும். பசுநெய்யை எடுத்து உதடுகளின் மேல் பூசி வர வெகுசில நாட்களில் வெடிப்புகள் மறையும்.
Average Rating