இலங்கையில் மீண்டும் சண்டை!! பேச்சு நடக்குமா?
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் பயங்கர சண்டை மூண்டுள்ளது. இதில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் ஜெனீவாவில் வரும் 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நார்வே தூதுவரின் தீவிர முயற்சியைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன. 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திடீரென ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே இன்று காலை கடும் போர் மூண்டது. இலங்கையின் கிழக்கில் உள்ள மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் சண்டை நடந்து வருகிறது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில்,
மட்டக்களப்பு மற்றும் அரசு வசம் உள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை புலிகள் திடீரென தாக்கினர். அதற்கு ராணுவம் பதிலடி கொடுத்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது.
மட்டக்களப்பில் உள்ள மண்கேர்னி என்ற இடத்தில் உள்ள ராணுவ நிலைகளை புலிகள் தாக்கினர். இருப்பினும் ராணுவம் பதிலடி கொடுத்ததில் புலிகள் பின்வாங்கிச் சென்றனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல் மிகக் கடுமையாக இருந்தது. இருப்பினும் அவர்கள் தரப்பில்தான் உயிர்ச் சேத¬ம் அதிகமாக இருந்தது. சண்டை நடந்த பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றார்.
இதற்கிடையே, கருணா பிரிவினரும் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் கூறுகையில், ராணுவத்தின் தாக்குதல் தொடர்ந்தால் திட்டமிடப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி விடும் என எச்சரிக்க விரும்புகிறோம். இந்த பேச்சுவார்த்தையில் எங்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை. பேச்சுவார்த்தைக்காக விடுக்கப்பட்டுள்ள அழைப்பை நாங்கள் மதிக்கிறோம். ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம்.
ஆனால், எங்களது மக்களும், தாயகமும் நசுக்கப்படும்போது அதுகுறித்து நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. ராணுவத்தின் தாக்குதல் தொடர்ந்தால் இலங்கை முழுவதும் போர் பரவும் என எச்சரிக்க விரும்புகிறோம். பேச்சுவார்த்தையிலும் நாங்கள் பங்கு கொள்ள முடியாத நிலை உருவாகும் என்றார்.
இதற்கிடையே விடுதலைப் புலிகளுடன் பேசக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வரும் சிங்கள கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிபர் ராஜபக்ஷே இறங்கியுள்ளார். முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாக ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.