புத்துணர்வு தரும் பழங்களின் தேநீர்!! (மருத்துவம்)
இஞ்சி தேநீர், ஏலக்காய் தேநீர், மூலிகை தேநீர், மசாலா தேநீர் மற்றும் துளசி தேநீர் எனப் பல வகையான தேநீரைக் கேள்விப்பட்டு இருப்போம். பருகி சுவைத்து இருப்போம். அந்த வரிசையில் தேநீர் பிரியர்களான உங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, பலவிதமான கனிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஃபுரூட் டீ சந்தையில் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளது.
உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, முக்கனிகளான மா, பலா, வாழை ஆகிய பழங்களைக் கொண்டு, விதவிதமாக தேநீர் தயாரித்து அருந்தலாம். இவை மட்டுமில்லாமல், அதிகளவில் நம்மால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் மாதுளை, லிச்சி, ஆப்பிள், செவ்வாழை, சாத்துக்குடி மற்றும் மலைவாழை முதலான பழவகைகளைக் கொண்டும் தேநீர் தயாரித்து அருந்தி மகிழலாம்.
காலையில் அலாரம் வைத்து, அது ஒலிக்கும் முன்னரே எழுந்து, அலுவலகத்தில், தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டுத் திரும்புபவர்களுக்குத்தான் ‘அசதி’ என்றால் என்வென்பது நன்கு தெரியும். இப்படி சோர்ந்து போயிருப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்க வல்லதுதான் Fruit Tea.
ஃபுரூட் டீ தயாரிக்க அதிகம் மெனக்கெட வேண்டாம். இதற்கு முதலில் தேவையான அளவு தண்ணீரை வெதுவெதுப்பான பதத்தில் கொதிக்க வைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் எந்த பழத்தில் தேநீரைத் தயாரிக்க விரும்புகிறீர்களோ, அதனுடைய சாறை அந்த நீருடன் கலக்க வேண்டும். உதாரணத்துக்கு மாதுளை தேநீர் என்றால், அதன் விதைகளைப் பிழிந்து எடுத்த சாறை வெந்நீருடன் கலக்க வேண்டும். ஆப்பிள், கொய்யா, பலா டீ என்றால் இவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தேவையான நேரம் கொதிக்க விட வேண்டும்.
கனிகளில் இயற்கையாகவே, இனிப்புச்சுவை நிறைந்திருப்பதால், சர்க்கரை, கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை இந்த டீயில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைப்படி பழ தேநீரை அருந்தி வரலாம். இந்த வகை தேநீரில் நமது உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிற வைட்டமின்கள், மினரல்கள் அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெயில் பீஸ்
அழகியல், அழகுணர்வு என்றதும் அனைவருடைய மனக்கண்ணில் முதலில் நிழலாடுவது ஜப்பானியர்கள். பூக்களை அடுக்கி வைப்பதில் தொடங்கி, படுக்கையறையை வடிவமைப்பது வரை எதையும் நுண்கலை(Fine Arts) நோக்கில். அழகியலோடு செய்து பார்த்து மகிழ்வார்கள்.
அந்த வகையில், தேநீர் அருந்துவதையும் இவர்கள் ஓர் அழகியல் வெளிப்பாடாகத்தான் பார்க்கின்றனர். அதனைப் பிரதிபலிப்பதுதான் ககுசோ ஒககூரா(Kakzo Okakura) எழுதிய Book of tea என்கிற தேநீர்க்கலை பற்றிய உன்னத படைப்பு. விதவிதமாகப் பழ தேநீர் செய்து, அருந்தி மகிழ விரும்புவர்கள் வாய்ப்பு கிடைத்தால் இப்புத்தகத்தையும் வாசிக்கலாம்.