வடக்கிலும் மோதல் தொடர்கிறது
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் இராணுவத்தின் முன்னரங்க பகுதியாகிய முகமாலை பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் ஆர்ட்டிலறி மற்றும் எறிகணை மோதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று தினங்களாக இப்பகுதியில் மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் நேற்றிரவும் இன்று பகல் வேளையிலும் இப்பிரதேசத்தில் எறிகணை மற்றும் ஆர்ட்டிலறி தாக்குதல்கள் சத்தம் தொடர்ச்சியாக கேட்ட வண்ணம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோதல் நிலைமைகள் காரணமாக கொடிகாமம் பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயரத் தொடங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தெல்லிப்பழை பகுதியில் 65 வயதுடைய ஓய்வுபெற்ற மகாஜனா யூனியன் கல்லூரியின் முன்னாள் அதிபராகிய கதிர்காமத்தம்பி நாகராசா என்பவர் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.