வாந்தி குமட்டலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை!! (மருத்துவம்)
முராயா கொய்னிகி என்கிற தாவர பெயரை கொண்டுள்ள கறிவேப்பிலையை ஆங்கிலத்தில் கறி லீப்ஸ் என்று சொல்வார்கள். அரோமா தெரபி என்று சொல்லக் கூடிய வாசனையை கொண்டு மருத்துவம் செய்யக் கூடிய வகையில், கறிவேப்பிலையின் மணம் கூட மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகிறது. கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது.
குறிப்பாக வைட்டமின் ஏ , வைட்டமின் சி, கால்சியம், அமினோ அமிலங்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இது உடலுக்கு பலம் தரக் கூடியதாக இருக்கிறது. இது ஈரலை பலப்படுத்துவதாக உள்ளது. கல்லீரலுக்கும் மண்ணீரலுக்கும் நல்ல பலத்தை தருகிறது. எலும்புகளுக்கு பலம் தருவதாக அமைகிறது. செரிமானத்தை தூண்டுவதாக அமைகிறது. சீதபேதியை தடுக்கிறது. பசியின்மையை, குமட்டலை போக்குகிறது.
கறிவேப்பிலையை பயன்படுத்தி வாந்தி, குமட்டல், வாதம், காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கக் கூடிய ஒரு கஷாயத்தை தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் கறிவேப்பிலையின் காம்புகள் 5. பெரிய நெல்லி இலையின் காம்புகள் 5. வேம்பு இலையின் காம்புகள் 3. முருங்கை இலையின் காம்புகள் 4. இவற்றை ஒன்றாக சேர்த்து லேசாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். சிறிது மிளகு பொடி, சிறிதளவு சுக்கு பொடி, இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இவற்றை ஒன்றாக சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் இதை வடிகட்டி எடுத்துக் கொண்டு அதில் தேன் சேர்த்து பருக வேண்டும். இது வாந்தி, குமட்டல், வாதம், காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்தும் மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது. செரிமானத்தை சரி செய்கிறது. பசியை தூண்டுகிறது. வயிற்றில் கசடுகள் தங்காமல் அதை வெளியேற்றும் தன்மை கொண்டதாக விளங்குகிறது. நீர் கோர்வை என்பது தலையில் நீர் ஏற்றம் என்று சொல்லக் கூடிய ஒரு அவஸ்தையாகும். தலைகனமாக இருக்கிறது என்று சொல்லக் கூடிய நிலையாகும்.
நெற்றி பகுதியில் வலி, மூக்கிலே நீர் கொட்டுதல் போன்ற அறிகுறிகளை கொண்டு காணப்படும் நிலையை தலையில் நீர் கோர்வை என்று சொல்வதுண்டு. ஆங்கிலத்தில் இதை சைனஸ்டிஸ் என்று சொல்கிறார்கள். கறிவேப்பிலையை பயன்படுத்தி நீர் கோர்வையை தடுப்பதற்கான மருந்தை தயாரிக்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள், கறிவேப்பிலை இலை பொடி, (கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து எடுத்து அதை பொடி செய்து எடுத்துக் கொள்ளக் கூடியது) பனங்கற்கண்டு.கறிவேப்பிலை பொடியை அரை ஸ்பூன் அளவு எடுக்க வேண்டும். அதனுடன் சம அளவு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர் கோர்வைக்கான ஒரு சிறந்த மருந்தாக இது செயல்படுகிறது..
Average Rating