ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய்!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 56 Second

‘வாழையடி வாழையாக’ வாழும்படி வாழ்த்துகிறோம். வாழையின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமக்குப் பயன்படுவதை அறிவோம். வாழையின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பை கி.மு. 600 ஆண்டு புத்த மத ஏடுகளில் காணலாம். மாமன்னர் அலெக்சாண்டர் கி.மு. 327ல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன. கி.பி. 200ம் ஆண்டில் சீனாவில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

‘‘வாழையை ஏழைகளின் எனர்ஜி உணவு என்றே சொல்லலாம். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அனேக மக்களின் பிரதான உணவுகளில் வாழைக்கே முன்னுரிமை உண்டு. உருளைக்கிழங்கை சமைக்கிற அதே முறைகளில் வாழைக்காயையும் சமைக்கலாம். பொரிக்கலாம். வேக வைக்கலாம். வறுக்கலாம்…’’ சுவையாக ஆரம்பிக்கிற ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ், வாழையின் மகத்துவங்களையும் மருத்துவ குணங்களையும் பற்றித் தொடர்கிறார்.

‘‘90 நிமிட உடற்பயிற்சிக்குப் பிறகு தேவைப்படுகிற எனர்ஜியை 2 வாழைப்பழங்களின் மூலம் பெற்றுவிட முடியும். உலக அளவில் விளையாட்டு வீரர்களின் விருப்பமான பழங்களில் வாழைப்பழத்துக்கே முதலிடம் என்பதில் சந்தேகமில்லை. இன்ஸ்டன்ட் எனர்ஜியை கொடுக்க மட்டுமின்றி, இன்னும் ஏராளமான உடல்நலக் கோளாறுகளை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி வாழைக்கு உண்டு.

மன அழுத்தம்

கடுமையான மன அழுத்தத் தில் இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டதும் அதிலிருந்து நிவாரணம் கிடைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காரணம், அதிலுள்ள ட்ரிப்டோஃபன். இது ஒருவகையான புரதம். இதை உடல் செரட்டோனினாக மாற்றும். செரட்டோனின் படபடப்பைக் குறைத்து, மகிழ்ச்சியான உணர்வைக் கொடுக்கக்கூடியது.

பி.எம்.எஸ்.

மாதவிலக்குக்கு முன்னால் மனத்தளவிலும் உடலளவிலும் ஏற்படுகிற பிரச்னைகளை ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் (பி.எம்.எஸ்.) என்கிறோம். அந்தப் பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக வாழைப்பழம் சரியான மாற்று மருந்து.

ரத்த சோகை

வாழைப் பழத்தில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து ரத்தசோகையை விரட்டக் கூடியது.

ரத்த அழுத்தம்

உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது. வாதத்தையும் வரவிடாமல் செய்யக்கூடியதாம்.

மலச்சிக்கல்

இதிலுள்ள நார்ச்சத்தானது செரிமானத்துக்கு உதவும் என்பது எல்லோரும் அறிந்ததே. மலமிளக்கும் மருந்துகளின் தேவையின்றி, மலச்சிக்கலைப் போக்கக்கூடியது.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சலால் அவதிப்படுவோர் அதற்கான மருந்துகளைத் தேடி ஓடாமல், உடனடியாக வாழைப்பழம் சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.

கொசுக்கடி

கொசுக்கடியின் அவதியிலிருந்து விடுபட, கனிந்த வாழைப்பழத்தைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

மசக்கை

கர்ப்ப கால மசக்கைக்கும் வாழை நல்ல மருந்து.

அல்சர்

வாழையின் மென்மையான, வழவழப்பான தன்மை காரணமாக, அது குடல் பிரச்னைகளுக்கும் மருந்தாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிகமாக அமிலம் சுரப்பதைக் கட்டுப்படுத்தி, வயிற்றுப் பகுதிக்கு இதமளிக்கக்கூடியதும் கூட.

இங்கிலாந்தில் 200 மாணவர்களுக்கு காலை, முன்பகல், மதியம் என மூன்று வேளைகளுக்கும் வாழைப்பழம் கொடுக்கப்பட்டதாம். அவர்கள் மற்றவர்களைவிட சிறப்பாக தேர்வுகள் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வாழையில் உள்ள பொட்டாசியத்துக்கு, மூளையின் ஆற்றலைத் தூண்டி, நினைவாற்றலைப் பெருக்கும் சக்தி உள்ளதே காரணமாம்.

மது அருந்திய பிறகு தொடரும் ஹேங் ஓவர் மனநிலைக்கு வாழை சிறந்த உணவு என்கிறார்கள் மருத்துவர்கள். வாழைப்பழத்தில் பாலும் தேனும் சேர்த்து மில்க் ஷேக்காக குடிப்பது இந்தப் பிரச்னைக்கு நல்லது என்கிறார்கள்.இவை தவிர,வாழையில் உள்ள அதிகளவு வைட்டமின் பி, நரம்பு மண்டல ஆரோக்கியத்துக்கு நல்லது. கர்ப்பிணிகளின் உடல் சூட்டை பேலன்ஸ் செய்து, குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கச் செய்யவும் வாழை உதவுகிறது. வாழையில் உள்ள வைட்டமின் பி 6 மற்றும் பி12, மக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, சிகரெட் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.

யாருக்குக் கூடாது?

கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள் வாழைக்காய், வாழைப்பழத்தைத் தொடவே கூடாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.ஆப்பிளைவிடச் சிறந்தது!ஆப்பிளைவிட 4 மடங்கு அதிக புரதம், 2 மடங்கு கார்போஹைட்ரேட், 3 மடங்கு அதிக பாஸ்பரஸ், 5 மடங்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து,2 மடங்கு அதிகமான வைட்டமின்
மற்றும் தாதுச்சத்துகளைக் கொண்டது வாழைப்பழம்.

வாழைக்காய் கபாப்

என்னென்ன தேவை?

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
வேகவைத்து மசித்த வாழைக்காய் – 3,
ஓட்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்.
சோம்புத்தூள் – 1 டீஸ்பூன்,
வறுத்துப் பொடித்த சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,
சாட் மசாலா – 1 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1,
கரம் மசாலா தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி இலை – 1/2 கப்,
உலர்ந்த திராட்சை – 10,
வேர்க்கடலை(தேவைப்பட்டால்) – 10,
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
கருப்பு உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

வாழைக்காயை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். இதை மசித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மேலே சொன்ன எல்லா பொருட்களையும் போட்டு
எல்லாவற்றையும் நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது அரிசி மாவு சேர்த்து பிசையலாம். கையில் எண்ணெய் தடவி இதை தட்டையாக தட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இதை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இரு பக்கமும் மொறுமொறுப்பாகும் வரை பொரிக்கவும். இதை கார சட்னி, இனிப்பு சட்னி, தயிர் பச்சடி ஆகியவற்றுடன் பரிமாறலாம். தக்காளி சாஸ் உடனும் பரிமாறலாம்.

வாழைக்காய் புட்டிங்

என்னென்ன தேவை?

வாழைக்காய் – 1,
வெல்லம் – 1 கப்,
முதல் தேங்காய்ப் பால் – 1 கப்,
இரண்டாம் தேங்காய்ப் பால் – 3 கப்,
நெய் – 4 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தேங்காய் துண்டுகள் – சிறிது.

எப்படிச் செய்வது?

அரை கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு கரைய விட்டு அழுக்குகள் போக வடிகட்டவும்.ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சூடானவுடன் வேகவைத்து மசித்த வாழைக்காயை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் பிரட்டவும். இத்துடன் வெல்லம், இரண்டாவது தேங்காய்ப் பாலை சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். கொதித்தவுடன் இறக்கி வைத்து முதல் தேங்காய்ப் பால் சேர்க்கவும். இது குளிர்ந்தவுடன் பாயசம் கீர் மாதிரி திக்காக இருக்கும். இத்துடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.கடாயில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

வாழைக்காய் அடை

என்னென்ன தேவை?

வாழைக்காய் – 1,
அரிசி – 2 கப்,
உளுந்து – 1/2 கப்,
துவரம் பருப்பு – 1/2 கப்,
கடலைப் பருப்பு – 1/4 கப்,
காஷ்மீரி மிளகாய் – 4,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு, காஷ்மீரி மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை கழுவி 3 மணி நேரம் ஊற விடவும். ஊறிய பிறகு பெருங்காயம், உப்பு சேர்த்து வழவழப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கறிவேப்பிலை சேர்க்கவும். 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். அடைக்கு நாம் கொரகொரப்பாக அரைப்போம். ஆனால், இதற்கு வழவழப்பாக தோசை மாவு போல் அரைக்க வேண்டும்.

வாழைக்காயை தோலுரித்து சீவி அலம்பிக் கொள்ளவும். தவாவை சூடாக்கி சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு துணியில் துடைக்கவும். வாழைக்காய் துண்டுகளை இந்த மாவில் தோய்த்து தவாவில் வைக்கவும். சிறிது எண்ணெய் ஊற்றி அதை பிரட்டி எடுக்கவும். இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி பிரட்டி எடுக்கவும். தேங்காய் சட்னி, வெல்லம் அல்லது வெண்ணெயுடன் பரிமாறவும்.

வாழையில் என்ன இருக்கிறது?

ஆற்றல்- 89 கிலோ கலோரிகள்,
மொத்த கொழுப்பு – 0.3 கிராம்
சோடியம் – 1 கிராம்
கார்போஹைட்ரேட் – 23 கிராம்
நார்ச்சத்து – 2.6 கிராம்
சர்க்கரை – 12 கிராம்
புரதம் – 1.1 கிராம்
நையாசின் – 0.665மி.கி
ரிபோஃப்ளோவின் – 0.073மி.கி.
வைட்டமின் ஏ – 3.00 மைக்ரோகிராம்
வைட்டமின் பி6 – 0.367மி.கி.
வைட்டமின் சி – 8.7மி.கி.
வைட்டமின் இ – 0.10மி.கி
வைட்டமின் கே – 0.5 மைக்ரோகிராம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குதிரைப்பந்தய மைதானத்தில் இளம்புயல்!! (மகளிர் பக்கம்)
Next post தளபதி விஜய்க்கு வந்த சோகம்மான நிலமை ! கதறியிய விஜய்!! (வீடியோ)