தாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்!!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 51 Second

பெண்களுக்கு இயற்கை கொடுத்த இனிய வரம் என தாய்மையை சொல்லலாம். அரும்பு மொட்டாகி பூவாகி கனியாவது போல் பெண் தாயாகும் தருணம் அற்புதமானது. வார்த்தையால் விவரிக்க முடியாத அற்புத தருணம் அது. ஆனால், இங்கு தாய்மை குறித்துதான் எத்தனை எத்தனை தவறான நம்பிக்கைகள், புரளிகள்! அதிலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூகதளங்கள் வந்த பிறகு மருத்துவ செய்திகள் எல்லாம் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

குழந்தை பெற ஏற்றது சிசேரியனா? சுகப்பிரசவமா? தாய்ப்பாலா அல்லது புட்டிப்பாலா… எது பெஸ்ட்? பிரசவத்துக்கு ஏற்ற இடம் வீடா? மருத்துவமனையா? என விதவிதமான அட்வைஸ்கள், விதவிதமான கருத்துகள். தாயாகும் தருணத்தில் இருக்கும் பெண்ணுக்கு இதில் எதை நம்புவது, எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பம்தான் மிச்சமாகிறது.

ஹேப்பி ப்ரக்னன்ஸி!

அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த மார்க்கரேட் நிகோலஸ், 40 வயதில்தான் கருவுற்றார். அதிலிருந்து குழந்தைப்பேறு வரை டஜன் கணக்கிலான பிளான்களைத் தீட்டினார். ஃபேஸ்புக் குரூப்பில் டயட் கவுன்சிலிங், உணவு, வீட்டிலேயே குழந்தைப் பிரசவம் என நீண்ட கனவை பிரசவ வாழ்க்கை, ஒரே நாளில் கலைத்துப்போட்டது. சிறப்பு உதவியாளருடன் பிரசவத்தை வீட்டிலேயே முயற்சித்த நிகோலஸ், வலி தாங்க முடியாமல் அலற, வேறு வழியின்றி அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

தன் ஆசைக் குழந்தையை அழகாகப் பெற்றெடுத்தார் நிக்கோலஸ். ஆறு மாதங்கள் வரை குழந்தைக்குப் பால் கொடுக்கும் பிளானில் இருந்த நிகோலஸுக்கு தைராய்டு பிரச்னை வந்து தடா போட, தாய்ப்பால் வங்கியையும், புட்டிப்பாலையும் நாட வேண்டிய சூழல். இது நிகோலஸ் என்ற ஒரு பெண்ணின் பிரச்னை மட்டுமல்ல. உலகத்தில் உள்ள இளம் தாய்மார்கள் பலருக்கும் பொதுவான சிக்கல்.

70 சதவிகித தாய்மார்கள் மனஅழுத்தத்தைச் சந்திப்பதாகவும், 43 சதவிகிதம் பேர் பிரசவ வலி நிவாரணிகள் பயன்படுத்து வதாகவும், 22 சதவிகிதம் பேர் எந்த பிளானும் இன்றி, சிசேரியனுக்கு ஓகே சொல்வதாகவும், தாய்ப்பால் கொடுக்க முடிவெடுத்த 20 சதவிகிதம் பேரில் பாதி அளவினரே அதனைச் செயல்படுத்தியுள்ளனர் என்றும் ‘டைம்’ இதழின் ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக் கருத்துகளில் மருத்துவர்கள், அரசு மற்றும் இணையத்தின் பங்கு அதிகம். பால் கசிவு, தூக்கமின்மை, அலுவலக வேலை ஆகிய சுயநலங்களுக்காகக் குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குள்ளாகவே புட்டிப்பால் தரும் பழக்கம் இளம்தாய்மார்களிடையே அதிகமாகியுள்ளது.

புரளியும் நிஜமும்!

முன்னணி குழந்தைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் Babycenter.com இணையதளத்தில் இளம்தாய்கள் பங்குபெறுவதற்கான பகுதியில்தான் ஏராளமான டூப் மேட்டர்கள். Mama Natural யூடியூப் தளமும் இதே போலத்தான் இயங்குகிறது. ‘‘1900ம் வருடத்தில் தாய்ப்பால் தொடர்பான பிரசாரங்கள் பற்றிய குற்றவுணர்ச்சிகள் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில், அன்று பெண்களின் வாழ்நாள் சராசரி 48 வயதுதான்…’’ என்கிறார் யேல் யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருத்துவர் மேரிஜேன் மின்கின்.

2015ம் ஆண்டு அமெரிக்க வீடுகளில் பிரசவமாகும் குழந்தைகளின் எண்ணிக்கை 38 ஆயிரம். டென்னிசியைச் சேர்ந்த குழந்தை உதவியாளரான இனாமே கஸ்கின் எழுதிய ‘Spiritual Midwifery’ (1975) என்ற நூல் இந்த புதிய ட்ரெண்டிங்குக்கு மூல காரணம். அமெரிக்காவில் 1.5 சதவிகித சிசேரியன்கள் நடைபெற்றாலும், கடந்த மூன்றாண்டுகளில் இந்த எண்ணிக்கை 26 சதவிகிதம் குறைந்திருக்கிறது.

நன்னம்பிக்கை முயற்சி!

குடல் தொற்று, அலர்ஜி, ஆஸ்துமா ஆகிய நோய்களை நீக்கும் வலிமையைக் குழந்தைகளுக்குத் தருவது தாய்ப்பாலே தவிர புட்டிப்பால் அல்ல. ‘‘தாய்ப்பால் நோய்களைத் தடுப்பதோடு, மூளையின் இயக்கத்துக்கும் உதவுகிறது. மேலும், குறைப்பிரசவக் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அதுவே அவசிய ஆதாரம்…’’ என்கிறார் அமெரிக்க குழந்தைகள் மருத்துவரான லோரி ஃபெல்ட்மன்.

1991ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப்பினால் உருவாகி செயல்படும் திட்டமே, BHFI (The Baby-friendly Hospital Initiative). இந்த இரு அமைப்பு களின் அங்கீகாரம் பெற்ற 420 மருத்துவமனைகளில்தான் 3.9 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன என்பது இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு சாட்சி. இந்த குழந்தை நட்புறவு மருத்துவமனைகளின் நோக்கமே, ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவதுதான்.

‘‘தாய்மை பற்றி உலகம் பல விஷயங்களை உங்களிடம் கொட்டினாலும், குழந்தை பிறப்பு, வளர்ப்பு விஷயங்கள் நம் திட்டங்களை மீறியவை…’’ என எதார்த்தமாகப் பேசுகிறார் ஓர் இளம்தாய். உண்மையும் அதுதான். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் கொட்டப்படும், ஷேர் செய்யப்படும் மருத்துவக் குறிப்புகளை அப்படியே நம்பாதீர்கள். உங்கள் குடும்ப மருத்துவரை கன்சல்ட் செய்து மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். தாய்மை அழகு. பெண்களுக்கு மட்டுமல்ல; சமுதாயத்துக்கும். l

-ச.அன்பரசு

குழந்தை இறப்புகள்! (Unicef Child Mortality Report 2017படி)

இறப்பு எண்ணிக்கை – 56 லட்சம் (2016), 1.26 கோடி (1990).

தினசரி இறப்பு விகிதம் – 15,000 (2016), 35,000 (1990).

இறப்பு வீழ்ச்சி விகிதம் – 41 (1000 குழந்தைகளுக்கு, 2016).

5 வயது குழந்தைகள் இறப்பு முதலிடம் – சஹாரா ஆப்பிரிக்கா பகுதி நாடுகள்(ஆயிரத்துக்கு 79 இறப்புகள், 2016).

5 – 14 வயது குழந்தைகள் இறப்பு விகிதம் ( இந்தியா) – 6% (2016) இறப்பு 160(1000 குழந்தைகளுக்கு, 2016).

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க!! (வீடியோ)
Next post ஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.!! (வீடியோ)