சிரமப்படுத்தும் சிறுநீர்த்தொற்று !! (மருத்துவம்)

Read Time:15 Minute, 44 Second

சுகப்பிரசவம் இனி ஈஸி

இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமஸ்டரில் கர்ப்பிணிக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த பல இதழ்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் கர்ப்பிணிக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்று மிகவும் முக்கியமானது.

பொதுவாகவே, ஆண்களை விடப் பெண்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிலும் கர்ப்ப காலத்தில் ஏற்பட்டுவிட்டால், கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என அஞ்சத் தோன்றும். மேலும், சிறுநீர்த் தொற்றுக்கு ஆன்டிபயாட்டிக்குளைக் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.

அப்போது அந்த மருந்துகளால் தனக்கோ குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று கர்ப்பிணிகள் கவலைப்படுவதும் உண்டு. எனவே, கர்ப்ப காலத்தில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வழிகளைத் தெரிந்து கொண்டால், இந்தக் கவலைகளுக்கு முடிவு கட்ட முடியும்.

சிறுநீர்த் தொற்று என்பது எது?

சிறுநீரகம், சிறுநீர் வடிகுழாய் (சிறுநீரை சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு எடுத்து வரும் குழாய்), சிறுநீர்ப்பை, இந்தப் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் ஆகிய பகுதிகளை பாக்டீரியா போன்ற கிருமிகள் தாக்குவதால் ஏற்படும் நோய்க்கு சிறுநீர்த் தொற்று அல்லது சிறுநீர்ப்பாதைத் தொற்று (Urinary Tract Infection – UTI) என்று பெயர்.

பெண்களுக்கு சிறுநீர் வெளியேறும் இடத்துக்கு அருகில்தான் ஆசனவாய் உள்ளது. ஆசனவாய் என்பது உடலின் ஒட்டுமொத்த உணவுக் கழிவுகளும் வெளியேறுகிற இடம். இங்கு பாக்டீரியாக்கள் கோடிக்கணக்கில் குடி கொண்டிருக்கும். பெண்கள் மலம் கழித்துவிட்டு, பின் பக்கத்திலிருந்து முன் பக்கத்துக்குத் தண்ணீர் விட்டுக் கழுவும்போது, ஆசனவாயிலிருந்து பாக்டீரியா கிருமிகள் சிறுநீர் வெளியேறும் இடத்துக்கு எளிதில் வந்துவிடும்.

காற்றும் வெயிலும் படாத மறைவிடம் என்பதால் பாக்டீரியாக்கள் இங்கு நன்றாக வளர்கின்றன. இதனால் பெண்களுக்கு எளிதில் சிறுநீர்த் தொற்று ஏற்பட்டு விடுகிறது.இது தவிர, மாதவிலக்கு நாட்களில் சுத்தம் பேணத் தவறும்போதும், மாதவிலக்கு நின்ற பிறகு அந்த இடம் வறட்சி அடைந்து சருமத்தில் வெடிப்புகள் ஏற்படுவதாலும் பெண்களுக்கு ஜலதோஷம் மாதிரி அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். புதிதாகத் திருமணமான பெண்களுக்கும், கருத்தடைக்காக கிரீம், ஜெல்லி, லூப், டயாப்ரம் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கும் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது வழக்கம்.

கர்ப்பிணிகளுக்கு ஏன் சிறுநீர்த் தொற்று?

கர்ப்ப காலத்தில், சிறுநீர் வெளியேறும் பகுதியை சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும், நீரிழிவு நோய் இருந்தாலும் சிறுநீர்த் தொற்று ஏற்படும். வீட்டில் கழிப்பறை வசதியும் தண்ணீர் வசதியும் இல்லாத ஏழை கர்ப்பிணிகள் சிறுநீரை அடக்குவார்கள். அப்போது அவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட வழி கிடைக்கிறது. காரணம், இந்த சந்தர்ப்பங்களில் சிறுநீர்ப்பையில் சிறுநீர் அதிகமாக சேர்ந்துவிடுவதால், அங்கே பாக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகி, நோயைக் கொண்டு வரும்.

இது தவிர, கருத்தரித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. காரணம், கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ந்துகொண்டே போவதால், கருப்பை அதற்கேற்றாற் போல் தன்னை விரித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. அப்போது அருகில் உள்ள சிறுநீர்ப்பையின் இடத்தையும் கொஞ்சம் அபகரித்துக் கொள்கிறது. குழந்தையின் தலை சிறுநீர்ப்பையை உள்நோக்கி அழுத்துவதால், சிறுநீர்ப்பையில் சிறிய வளைவு ஏற்படுகிறது. அந்த வளைவில் சிறுநீர் தேங்குகிறது. தேங்கும் சிறுநீரில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ள காரணத்தால், கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது.

கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் கர்ப்பிணியின் உடலில் பல ஹார்மோன்கள் மாற்றம் அடைகின்றன. இவற்றின் விளைவால், குழந்தை பிறந்து வெளியேறும் கர்ப்ப வாயில் உள்ள சருமம் விரிவடையும். அந்த இடத்தில் சரும வறட்சி இருந்தால் வெடிப்புகள் உண்டாகும். அப்போது அந்த வெடிப்புகளிலும் பாக்டீரியாக்கள் புகுந்துகொண்டு சிறுநீர்த் தொற்றை ஏற்படுத்தும்.

சிறுநீர்ப்பையில் மட்டும் கிருமித்தொற்று இருந்தால் அதை சிறுநீர்ப்பை அழற்சி(Cystitis) என்றும், சிறுநீரகத்திலும் தொற்று காணப்பட்டால், அதை சிறுநீரகச்சீழ் அழற்சி(Pyelonephritis) என்றும் மருத்துவர்கள் அழைக்கிறார்கள். புதிதாகத் திருமணமான பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்றுக்கு தேனிலவுச் சிறுநீர்ப்பை அழற்சி(Honeymoon cystitis) என்ற பெயரும் உண்டு.

என்னென்ன அறிகுறிகள்?

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு, சிறுநீர் போகும்போது எரிச்சல், கடுப்பு, அரிப்பு, அடிவயிற்றில் வலி, முதுகில் விலாபகுதிகளில் வலி ஏற்படுவது, கஞ்சி அல்லது பால்போல் சிறுநீர் போவது, சிறுநீரில் ரத்தம் கலந்துபோவது, சிறுநீர் துர்நாற்றம் எடுப்பது, குளிர் காய்ச்சல் வருவது, வாந்தி, தலைவலி போன்றவை ஏற்படுவது ஆகியவை சிறுநீர்த் தொற்றுக்கான முக்கிய அறிகுறிகள்.

என்ன பரிசோதனை? என்ன சிகிச்சை?

ஒருவருக்கு சிறுநீர்த் தொற்று இருப்பதை சிறுநீர் பரிசோதனையில் எளிதில் கண்டுபிடித்து விடலாம். முதலில், சிறுநீரில் டெப்பாசிட்ஸ்(Urine deposits) என்று ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் சிறுநீரைப் பக்குவப்படுத்தி ஒரு நுண்ணோக்கியில் பார்த்தால், அதில் சீழ் அணுக்கள்(Pus cells) இருப்பது தெரிய வரும். இது பாக்டீரியாக்களின் தாக்குதல் காரணமாக ஏற்படும் பாதிப்பு என்பதை உறுதிப்படுத்தும்.

இதை அடிப்படையாகக் கொண்டு தோராயமாக ஓர் ஆன்டிபயாடிக் மருந்தை மருத்துவர்கள் முதலில் பரிந்துரைப்பார்கள். என்றாலும், தெளிவான, சரியான ஆன்டிபயாட்டிக்கைக் கொடுப்பதற்குப் பயன்படும் வகையில் சிறுநீர் கல்ச்சர் மற்றும் சென்சிட்டிவிட்டி(Urine culture and sensitivity) பரிசோதனையை மேற்கொள்ளப் பரிந்துரைப்பார்கள்.

இந்த பரிசோதனைக்கு சிறுநீரை சேகரித்துக் கொடுப்பதில் கொஞ்சம் கவனம் வேண்டும். அதாவது, இதற்கென உள்ள வாயகன்ற, தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஒரு பாட்டிலில் சிறுநீரைக் கொடுக்க வேண்டும். அதற்கு முன்பாக சிறுநீர் வெளியேறும் பிறப்புறுப்புப் பகுதியை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முதலில் சிறிதளவு சிறுநீரைக் கழித்துவிட்டு, பிறகு மீதியை அந்த பாட்டிலில் சேகரித்துக் கொடுக்க வேண்டும். அப்படிச் சேகரிக்கும்போது, கர்ப்பிணியின் பிறப்புறுப்பை பாட்டில் தொட்டுவிடக் கூடாது என்பது முக்கியம்.

இந்தப் பரிசோதனையின் முடிவு தெரிவதற்குக் குறைந்தது 48 மணி நேரம் ஆகும். இதன் மூலம் சிறுநீர்த் தொற்றுக்கு எந்த பாக்டீரியா காரணம் என்பதை சரியாகத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, சிறுநீரில் எந்தக் கிருமி இருக்கிறது, எவ்வளவு இருக்கிறது என்பதையும் அந்தக் கிருமி எந்த ஆன்டிபயாடிக் மருந்துக்குக் கட்டுப்படும் என்பதையும் மிகத் தெளிவாகத் தெரிவித்துவிடும்.

இதன்படி சரியான ஆன்டிபயாடிக்கைக் கொடுத்து விட்டால், பாக்டீரியாக்கள் முழுவதும் ஒழிந்து, சிறுநீர்த் தொற்று 100 சதவீதம் குணமாகிவிடும். இல்லையென்றால், பாக்டீரியாக்கள் அரைகுறையாக அழிந்து, மீண்டும் தாக்கும். இதனால் அடிக்கடி சிறுநீர்த் தொற்று தொல்லை கொடுக்கும்.
குழந்தையை பாதிக்குமா?

கர்ப்பிணியின் சிறுநீர்ப்பையில் மட்டும் நோய்த்தொற்று ஏற்படுமானால், அது கருவில் வளரும் குழந்தையை பாதிக்காது. கர்ப்பிணியின் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது என்றால், சிலருக்கு குறிப்பிட்ட நாளுக்கு முன்பே பிரசவம் ஆகலாம். சிறுநீரைப் பரிசோதிக்காமல் தோராயமாக ஆன்டிபயாடிக் மருந்தைக் கொடுக்கும்போது நோய் முழுவதும் கட்டுப்படாமல், கர்ப்பிணியின் பொது ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.

இது பிரசவ நேரத்தில் தாய் சேய் இருவருக்கும் சிக்கலை ஏற்படுத்தும். முதல் டிரைமஸ்டரில் இது ஏற்படுமானால், கருச்சிதைவு ஏற்படவும் வழி உண்டு. மேலும், கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர்த்தொற்று ஏற்படும்போது, கர்ப்பிணிக்கு ரத்தசோகை நோய் உண்டாகும். இதுவும் பிரசவத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

தடுக்கும் வழி என்ன?

சிறுநீர்த் தொற்று ஏற்படுவதை அலட்சியப்படுத்தக் கூடாது. சில நேரங்களில் இது சிறுநீரகச் செயலிழப்பில் கொண்டு போய்விட்டு விடும். நம் நாட்டில், இது ‘உடல் சூடு காரணமாக வருகிறது’ என்ற தவறான கண்ணோட்டத்தில் இதை அணுகும் கர்ப்பிணிகளும் இருக்கிறார்கள். இவர்கள் மாத்திரைகள் சாப்பிட பயந்து கொண்டு, இளநீர் சாப்பிடுகிறேன், பழச்சாறு குடிக்கிறேன், இரண்டு வேளை குளிக்கிறேன் என்பது போன்ற மேலோட்டமான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதுண்டு. இந்த மாதிரியான கர்ப்பிணிகளுக்கு ஏற்கனவே சொன்ன பல பாதிப்புகளை சிறுநீர்த் தொற்று ஏற்படுத்திவிடும். எனவே, எச்சரிக்கை அவசியம்.

கர்ப்ப காலத்தில் மட்டும் என்றில்லை, பெண்கள் தங்கள் அந்தரங்கப் பகுதிகளை எப்போதும் மிகமிகச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நகங்களை வெட்டிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். மலம் கழித்த பிறகு பிறப்புறுப்பு உள்ள முன் பக்கத்தை முதலில் கழுவிவிட வேண்டும். அதைத் தொடர்ந்து மல வாய் உள்ள பின்பக்கத்தைப் பின்னோக்கிக் கழுவ வேண்டும். உள்ளங்கையைப் பின் பக்கத்திலிருந்து முன் பக்கமாகக் கொண்டு வரக்கூடாது.

தாம்பத்தியத்தின் போது, பாக்டீரியாக்கள் சிறுநீர்ப் பாதைக்குள் புகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால், அதன் பிறகு பெண்கள் சிறுநீர் கழித்துவிட்டு உறங்குவது நல்லது. நிறைய தண்ணீர் விட்டுக் கழுவுவதும் மிகவும் நல்லது.அடுத்து, அடிக்கடி சிறுநீர் கழித்து விட வேண்டும். சிறுநீரை எந்தக் கட்டத்திலும் அடக்கி வைக்கக் கூடாது.

தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். திரவ உணவுகளை அதிகப்படுத்த வேண்டும். முக்கியமாக, இவர்களுக்கு இளநீர் மற்றும் பழச்சாறுகள் உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்படுமானால், பழச்சாறுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பதிலாக, ரத்தச் சர்க்கரையை நன்றாக கட்டுப்படுத்திக் கொண்டு, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முழு பழங்களைச் சாப்பிடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பகால சர்க்கரை நோய்! (மருத்துவம்)
Next post இளையராஜாவுடன் வாசிக்கணும்!! (மகளிர் பக்கம்)