உப்புல் தாரங்கா சதம்! சிறிலங்கா 285 ரன்கள் குவித்தது!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தனது 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் உப்புல் தாரங்காவின் சதத்தினாலும், குமார சங்ககாராவின் அதிரடி ஆட்டத்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை குவித்துள்ளது சிறிலங்க அணி! வங்கதேச அணிக்கு எதிராக சதமடித்த உப்புல் தாரங்கா இன்றும் மிகச் சிறப்பாக விளையாடி சதமடித்தார். 130 பந்துகளை எதிர்கொண்டு 13 பௌண்டரிகளுடனும், ஒரு சிக்ஸருடனும் 110 ரன்களைக் குவித்தார் தாரங்கா.
2 விக்கெட்டுகள் இழப்பிற்கு பிறகு ஆடவந்த குமார சங்ககாரா, 86 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 80 ரன்கள் அடித்தது மட்டுமின்றி, தாரங்காவுடன் இணைந்து 3வது விக்கெட்டிற்கு 165 ரன்களைக் குவித்தார்.
இவர்கள் இருவருக்கும் பிறகு ஆடவந்த அட்டபட்டு 30 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே அணியின் அயர்லாந்து 53 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும், காமன்கோசி 58 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், உத்சேயா 58 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.