யாழ்ப்பாணத்தில் புலிகள் – ராணுவம் கடும் மோதல்!
ஜெனீவாவில் வரும் 28, 29 ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்துவது என்று ஒப்புக்கொண்ட 24 மணி நேரத்திற்குள் யாழ்ப்பாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளை நோக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு கடும் போர் மூண்டுள்ளது! விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முகமாலை, கிளாலி, நாகர்கோயில் ஆகிய பகுதிகளை நோக்கி இன்று காலை 6.30 மணி முதல் கனரக பீரங்கிகளைக் கொண்டும், பல்குழல் பீரங்கிகளைக் கொண்டும் ராணுவம் தாக்குதல் நடத்திக் கொண்டு முன்னேறியதையடுத்து, புலிகளும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக புலிகளின் ராணுவ பேச்சாளர் ராசையா இளந்திரையன் கூறியுள்ளார்.
“பீரங்கித் தாக்குதல் தாக்குதல் நடத்திக் கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்துள்ள சிறிலங்க ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் கடுமையாக போரிட்டு வருகின்றனர்” என்று இளந்திரையன் கூறியுள்ளார்.
அல்லாரை, கச்சை, தானன்கிளப்பு, கோவிலகண்டி ஆகிய கடலோரப் பகுதிகளில் சிறிலங்க ராணுவம் ஊரடங்கு பிறப்பித்துள்ளதாகவும் தமிழ்நெட் செய்தி கூறுகிறது.
முகமாலை, கிளாலி ஆகிய இடங்களில் விடுதலைப் புலிகள் தங்களுடைய பலத்தை அபரிதமாக அதிகரித்ததையடுத்தும், சிறிலங்க ராணுவத்தின் நிலைகளை நோக்கி பீரங்கி மற்றும் எரிகுண்டு தாக்குதலை நடத்தியதற்கு பதிலாகத்தான் சிறிலங்க ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக யு.என்.ஐ. செய்தியாளரிடம் சிறிலங்க ராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார்.
கொடை நாடுகளின் வற்புறுத்தலிற்கு இணங்கி பேச்சுவார்த்தைக்கு தாங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஆனால், தங்களுடைய நிலைகளின் மீது சிறிலங்க ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தாவிட்டால், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் நார்வே சிறப்புத் தூதரிடம் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கொழும்புவில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நார்வே அயலுறவு மேம்பாட்டு அமைச்சர் எரிக் சோல்ஹீம், மோதலை கைவிட்டுவிட்டு அமைதி ஏற்படுத்துவதற்கு கிடைத்துள்ள இந்த நல்வாய்ப்பை விடுதலைப் புலிகளும், சிறிலங்க அரசும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.