2வது அணு குண்டை சோதித்ததா வ.கொரியா?
ஜப்பானுக்கு அருகே 5.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் பதிவானதால், வட கொரியா 2வது அணு குண்டு சோதனையை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனால் இது வழக்கமான நில நடுக்கம்தான் என அமெரிக்க புவியியல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் ஹோன்சு என்ற இடத்தில், ஜப்பான் நேரப்படி காலை 9.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவுக்கு பதிவானது.
வட கொரியா 2வது அணுகுண்டு சோதனையை நடத்தப் போவதாக கூறியிருந்ததால், வட கொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தியதால்தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதப்பட்டது.
ஆனால் இது அணு குண்டு சோதனையால் ஏற்பட்ட நில அதிர்வு அல்ல என அமெரிக்க புவியியல் துறை நிபுணர்கள் விளக்கியுள்ளனர். அதற்கான வாய்ப்பே இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
ஆனால் வட கொரியா 2வது அணுகுண்டு சோதனையை நடத்தியிருக்கலாம் என ஜப்பான் சந்தேகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் அரசுத் தரப்பில் கூறுகையில், வட கொரியாவில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது அணுகுண்டு சோதனையால் ஏற்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், வட கொரியா 2வது அணுகுண்டு சோதனையை நடத்தியதா என்பது குறித்து உறுதி செய்ய முடியவில்லை என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுகுறித்து எங்களுக்கு எந்த்த தகவலும் இல்லை என்றார்.