“அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு ஆறரை லட்சம் இராக்கியர்கள் பலி”
அமெரிக்கா தலைமையிலான படைகள் மேற்கொண்ட இராக்கிய படையெடுப்பின் போதும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளாலும் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் படையெடுப்பு நடைபெற்ற பிறகு மாதந்தோறும் சராசரியாக 15 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வு வெளியிட்டுள்ள எண்ணிக்கை இது வரை இது தொடர்பாக பிற அமைப்புகள் வெளியிட்ட கணிப்புகளை விட அதிகம். வன்முறைகளால் மாதந்தோறும் மூவாயிரம் பேர் இறக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சமீபத்தில் வெளியிட்ட கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இராக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1800 குடும்பங்களில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து இராக்கிய மருத்துவர்களால் நடத்தப்பட்ட பேட்டிகளில் இருந்து அமெரிக்க ஆய்வாளர்களால் இந்த புதிய மதிப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை கணிக்க இந்த முறை பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.