52 மாடி கட்டடத்தில் விமானம் மோதி விபத்து
நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் 52 மாடி கட்டடத்தில் சிறிய விமானம் மோதியதில் பலர் பலியாகினர். தீவிரவாதிகள் தாக்குதலோ என பீதி ஏற்பட்டதால் நியூயார்க் நகரில் போர் விமானங்கள் வானில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. நியூயார்க்கைச் சேர்ந்த பேஸ்பால் வீரர் கோரி லிட்டில் தனது சிறிய ரக விமானத்தில் மன்ஹாட்டன் பகுதியில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அந்த விமானம் எதிர்பாராதவிதமாக 52 மாடிக் கட்டடம் ஒன்றின் மோதியது.
இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. கட்டடத்தின் சில மாடிகளும் சேதமடைந்து தீப்பிடித்து எரிந்தன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நியூயார்க் இரட்டை கோபுரம் விமானம் மூலம்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இதேபோல இந்த சம்பவம் நடந்ததால், தீவிரவாதிகள் தாக்குதலாக இருக்கக் கூடும் என பீதி கிளம்பியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பினர், போலீஸார் விரைந்து வந்து சுற்றி வளைத்தனர். போர் விமானங்களும் உஷார்படுத்தப்பட்டன. நியூயார்க் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் போர் விமானங்கள் வான் வழி கண்காணிப்பு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. நடத்திய விசாரணையில் மன்ஹாட்டன் சம்பவம் ஒரு விபத்து என தெரிய வந்தது. வானிலை சரியில்லாத காரணத்தால் விமானம் திசை மாறி கட்டடத்தின் மீது மோதியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் பேஸ்பால் வீரர் லிட்டில் மற்றும் பலர் இறந்துள்ளனர். இதுவரை நான்கு பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரின் 72வது கிழக்குத் தெருவில் விபத்துக்குள்ளான கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் 1980ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு ஏராளமான அபார்ட்மென்ட்டுகள் உள்ளன.
லிட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்கிய விமானம் நான்கு பேர் அமரக் கூடிய வகையிலான மிகச் சிறிய விமானம் ஆகும். நியூஜெர்சியில் உள்ள டெடர்போரோ விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் கிளம்பியது.
விபத்து குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனி பிரேட்டோ கூறுகையில், இந்த விபத்து குறித்து அதிபர் புஷ்ஷுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து குறித்த முழு விவரங்களையும் சேகரித்து வருகிறோம் என்றார்.
விபத்தைத் தொடர்ந்து மன்ஹாட்டன் பகுதிக்கு மேல் விமானங்கள் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மேலும், நியூயார்க் நகரிலிருந்து கிளம்பும் விமானங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.