அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல்; அதிபர் புஷ் கட்சி தோற்கும்: கருத்துக் கணிப்பு முடிவு
அமெரிக்காவில் நவம்பர் 7-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற (காங்கிரஸ்) தேர்தலில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என்றும், எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. நாடு எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளைக் கையாள்வதற்குத் தகுதியானவர்கள் யார் என்ற கேள்விக்கு, 54 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சியினர் என்றும், 35 சதவீதம் பேர் குடியரசுக் கட்சியினர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில், மீண்டும் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதி படைத்தவர்கள் எந்தக் கட்சியினர் என்ற கேள்விக்கு, ஜனநாயகக் கட்சியினர் என்று 55 சதவீதம் பேரும், குடியரசுக் கட்சியினர் என்று 39 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
ஏபிசி நியூஸ், வாஷிங்டன் போஸ்ட் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
புளோரிடா எம்.பி. ஒருவரின் பாலியல் முறைகேடு விவகாரத்தை, குடியரசுக் கட்சியினர் சரியாகக் கையாளவில்லை என்று, சிஎன்என் மற்றும் யுஎஸ்ஏ டுடே ஆகியவை தனித்தனியே நடத்திய கருத்துக் கணிப்புகளில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் தெரிவித்துள்ளனர்.
தேசப் பாதுகாப்புப் பிரச்சினையிலும் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு குறைந்துவிட்டது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் சரியான முடிவு எடுக்கக் கூடிய கட்சி எது என்ற கேள்விக்கு, குடியரசுக் கட்சிக்கு 41 சதவீதம் பேரும், ஜனநாயகக் கட்சிக்கு 40 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நியூயார்க் டைம்ஸ், சிபிஎஸ் நியூஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு இது.
இந்த 4 கருத்துக் கணிப்புகளிலும், குடியரசுக் கட்சியைவிடவும் ஜனநாயகக் கட்சிக்கு 13 முதல் 23 புள்ளிகள் அதிக ஆதரவு கிடைத்துள்ளது.