போர் கைதிகளாக பிடிபட்ட 74 சிப்பாய்களை புலிகள் கொன்றுவிட்டனர் இலங்கை அரசு குற்றச்சாட்டு
போர் கைதிகளாக உயிரோடு பிடிபட்ட 74 சிப்பாய்களை புலிகள் கொன்றுவிட்டனர் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதி ஒன்றை அழிப்பதற்காக 78 ராணுவ சிப்பாய்கள் கொண்ட ஒரு படை தாக்குதலில் ஈடுபட்டது. அந்த படையினர் அனைவரையும் விடுதலைப்புலிகள், உயிரோடு போர் கைதிகளாக சிறை பிடித்து கொண்டனர். அவர்களில் 74 பேரை கொடூரமாக கொன்று விட்டனர். இது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. மீதி 4 ராணுவ வீரர்களை காணவில்லை.
515 பேர் காயம்
விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட 74 பேரை தவிர, வேறு 55 ராணுவ வீரர்கள் சண்டையில் பலியானார்கள். 515 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். விடுதலைப்புலிகள் தரப்பில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் மவுனம்
இந்த குற்றச்சாட்டு பற்றி விடுதலைப்புலிகள் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்த 74 பேரும் சண்டையில் பலியானதாக விடுதலைப்புலிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். அவர்களின் உடல்களை செஞ்சிலுவை சங்கம் மூலமாக இலங்கை ராணுவத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். சண்டையில் தங்கள் தரப்பில் 10 பேர் மட்டுமே இறந்ததாகவும் அவர்கள் கூறினர்.