ஆட்சியில் இருந்து என்னை நீக்கினால் பாகிஸ்தானே சிதறி விடும்: முஷாரப்
ஆட்சியில் இருந்து என்னை நீக்கினால் பாகிஸ்தானே சிதறி விடும் என அந்நாட்டு அதிபர் பர்வீஸ் முஷாரப் புதன்கிழமை எச்சரித்துள்ளார். இஸ்லாமாபாதில் புதன்கிழமை இரவு அனுசரிக்கப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியது: எந்த நிலையிலும் இந்த நாட்டுக்குள் பயங்கரவாதம் அணுகாத வகையில் கடந்த 7 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வருகிறேன். உண்மையில் நான் ஒரு “மிதவாதி’. மிதவாதிகள் தான் பாகிஸ்தானை ஆள வேண்டும் என்று இந்நாட்டின் தந்தை மும்மது அலி ஜின்னா அன்றே கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் மிதவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடையே தான் தேர்தல் போட்டி ஏற்பட உள்ளது. மிதவாதம் தான் வெற்றி பெறும் என்பது உலகில் பல இடங்களில் கண்ட அனுபவம். இங்கு மிதவாதிகள் தான் வெற்றிப் பெற வேண்டும். அவர்கள் தான் நாட்டை ஆள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தீவிரவாதம் வென்றால் ஜின்னா கண்ட இந்த பாகிஸ்தான் இல்லாமல் ஆகி விடும்.
பாகிஸ்தானில் தனிநபர் எதையும் நாட்டுக்காக செய்துவிட முடியாது. தனிநபர் வருவார் போவார். ஆனால், நாடு நிரந்தரமாக இருக்கும். கடந்த காலங்களில் இரண்டு தனிநபர்கள் (பேநசீர், நவாஸ் ஷெரீப்) இந்த நாட்டை ஆண்டு விட்டுச் சென்றார்கள். மீண்டும் இவர்கள் வரும் தேர்தலில் போட்டியிட வருவார்கள். அவர்களை ஆதரிக்க கூடாது.
இவர்கள் இருவரும் இணைந்து தேர்தலை சந்திப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இவர்கள் என்னதான் கூட்டு வைத்தாலும் மிதவாதம் தான் என்றும் வெற்றி பெறும்.
தீவிரவாதத்தை பாகிஸ்தானில் இருந்து முற்றிலும் அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அண்மையில் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்த போது கூட, தீவிரவாத்தை அடக்க நான் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பாராட்டினர். இத்தகைய நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலை சந்திக்கிறேன் என்றார்.