நீரின்றி அமையாது உடல்!! (மருத்துவம்)
எந்த ஒரு பொருளையும் இழக்கும்போதுதான் அதன் அருமையும் புரியும். மனித இனத்துக்கு இன்றியமையாத தேவையான தண்ணீரும் அப்படி ஒரு கொடைதான்! இதன் அருமை உணர்ந்த ஐ.நா. சபை மக்களுக்கு தண்ணீரின் முக்கிய பயன்களை எடுத்துரைத்து, தண்ணீரை சிக்கனமாக செலவழித்து, அடுத்த தலைமுறைக்கும் பயன்படுமாறு செய்யவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பல நோய்களை அண்டவிடாமல் தடுக்கும் அருமருந்தாகவே செயல்படுகிறது தண்ணீர். ஒரு மனிதனால் உணவின்றி 3 வாரங்கள் வரை வாழ முடியும். தண்ணீர் குடிக்காமல் 4 நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது.
தண்ணீர் ஏன் அவசியம்?
உடலானது சோர்வை உணர ஆரம்பித்தாலே, மூளையில் இருந்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற சிக்னல் உடலுக்கு செல்லும். அதுதான் தாகமாக மாறி தண்ணீர் குடிக்க வைக்கிறது. இப்படி தாகத்தை உணரவில்லை என்றால் தண்ணீர் குடிக்காமல் நீண்ட நேரம் இருப்போம். 10 சதவிகித நீர் இழப்பு ஏற்பட்டாலே, மனநலமும் உடல்நலமும் பெருமளவு சீர்கேடு அடையும். உடலில் 15 சதவிகிதத்துக்கும் அதிக நீர் இழப்பு ஏற்பட்டால் மரணத்தின் விளிம்புக்கே கொண்டு செல்லும்.
எப்படி குடிக்க வேண்டும்?
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இருந்து 20 சதவிகித தண்ணீர்தான் உடலுக்குக் கிடைக்கிறது. மீதமுள்ள 80 சதவிகிதம் தண்ணீர் நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் பானங்களில் இருந்தே கிடைக்கிறது. நாளொன்றுக்கு ஒரு மனிதன் குறைந்தபட்சம் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் அளவானது வயதுக்கு ஏற்ப மாறுபடும். தண்ணீர் பாட்டிலை அருகிலேயே வைத்துக் கொள்வது நலம். தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிப்பது என்று இல்லாமல் அடிக்கடி தண்ணீர் குடிக்கப் பழகுங்கள். ஆனால், சிறுநீரக நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை ப்படியே தண்ணீர் பருக வேண்டும்.
தண்ணீர் என்னவெல்லாம் செய்யும்?
உடலுக்கு தேவையற்ற அந்நியப் பொருட்களையும் நச்சுப்பொருட்களையும் வெளியேற்றுகிறது. அதிர்ச்சியின் போது அதைத் தாங்கும் காரணியாகச் செயல்பட்டு முக்கிய உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஊட்டச்சத்தை தண்ணீரே அளிக்கிறது. இதனால்தான் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் நெடுநேரம் இருக்கும்போது, உடல் எளிதாக சோர்வடைகிறது.
மூட்டுகளில் உராய்வு ஏற்படாமல் வழவழப்பாக வைக்க உதவுகிறது. சருமத்தை உலர்வடையாமல் மினுமினுப்பாக வைக்கிறது. ரத்தத்தின் அடர்த்தியை சரியாக வைத்திருக்கவும், ரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சீராக்கி ஓட வைப்பதற்கும் உதவுகிறது. செரிமானத்தை சீர்ப்படுத்தி மலச்சிக்கல் வராமல் இருக்கச் செய்கிறது. உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.
Average Rating