கருவளையங்களுக்கான அழகு சாதனங்களும் சிகிச்சைகளும்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 21 Second

எப்படிக் குறைப்பது?

அடர்த்தி குறைந்த மாயிச்சரைசர் கலந்த சன் ஸ்கிரீன் உபயோகிப்பது கருவளையங்களின் தீவிரத்தைக் குறைக்கும்.

அழகுக்கலை நிபுணரை ஆலோசித்து ஸிங்க் ஆக்சைடு அல்லது டைட்டேனியம் டை ஆக்சைடு கலந்த ஐ கிரீம் உபயோகிக்கலாம். சிலருக்கு இது அலர்ஜியை ஏற்படுத்தலாம். அப்படியானால் அதை உபயோகிப்பதைத் தவிர்த்து விடவும்.

வெயிலில் செல்லும் போது யுவி கதிர்களின் தாக்கம் காரணமாக கருவளையங்கள் அதிகமாகலாம். அதைத் தவிர்க்க தரமான கண்ணாடிகள் அணியலாம்.

உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி இருந்து அதன் விளைவாக கண்களுக்கு அடியில் கருமையும் வீக்கமும் இருந்தால் மருத்துவரைக் கேட்டு அலர்ஜிக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டிலேயே என்ன செய்யலாம்?

ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறும், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினம் ஒன்றிரண்டு முறைகள் கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவலாம்.

வெள்ளரிக்காயைத் துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தினம் சிறிது நேரம் இந்தப் பஞ்சை கண்களின் மேல் வைத்தபடி படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கவும். இது கருவளையங்களையும் போக்கி, கண்களின் களைப்பையும் சரியாக்கும்.

பச்சை உருளைக்கிழங்கை மண் போக நன்கு கழுவி, துருவி, அப்படியே கண்களின் மேல் வைத்து, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது கண்களுக்கடியிலான சருமத்தை பிளீச் செய்யும்.

உபயோகித்த டீ பைகளை ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்து, கண்களுக்கு மேல் வைத்து ஓய்வெடுப்பதும் கண்களுக்குப் புத்துணர்வு தரும்.

கண்களை கிளென்ஸ் செய்யும் போதும் சரி, கிரீம் தடவும் போதும் சரி, எப்போதும் முதலில் மேல் நோக்கி யும், பிறகு வெளிப்பக்கமாகவும், அடுத்து உள் பக்கமாகவும் தடவ வேண்டும்.

கண்களுக்கான கிரீம்களை ஆலோசனையின்றி அளவுக்கதிகமாக உபயோகிக்க வேண்டாம்.

கண்களுக்குள் விளக்கெண்ணெய் விடும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தேவையற்றது. விளக்கெண்ணெயை மோதிர விரலால் தொட்டு, கண்களைச் சுற்றி மிக மென்மையாக வருடிக் கொடுக்கலாம்.

கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு கண்களுக்கடியில் கருமையும், பை மாதிரியான தோற்றமும் வருவது இயல்பு. லென்ஸ் உபயோகிப்பவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை அதை மாற்ற வேண்டும்.

கண்களுக்கு உபயோகிக்கிற பொருட்கள் ஏதேனும் அலர்ஜி எனத் தெரிந்தால், அவற்றை உடனே நிறுத்தி விட்டு, ஒவ்வாமை தராத நல்ல தயாரிப்புகளை உபயோகிக்க வேண்டும்.

கண்களின் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையான விஷயம் நல்ல தூக்கம். சிலருக்கு 5 மணி நேரத் தூக்கமே போதுமானதாக இருக்கும். சிலருக்கு 7 மணி நேரம் தேவைப்படலாம். சராசரியாக 8 மணி நேரம் தூக்கம் நல்லது என்கிறார்கள். இதை ஒரேயடியாக 8 மணி நேரமாகவோ அல்லது இரண்டு பகுதிகளாகவோ பிரித்துக் கொள்ளலாம்.

சிலருக்குக் கண்கள் எப்போதும் களைப்பாகக் காணப்படும். கூடவே அரிப்பும் இருக்கும். அப்படி அரிக்கிற போது, கண்களைத் தேய்ப்பார்கள். தேய்க்கும் போது இதமாக இருந்தாலும், தேய்த்து முடித்ததும், கண்களைச் சுற்றி கருமை அதிகமாகும்.

என்னதான் பிசியான வேலைகள் இருந்தாலும், ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் 10 நிமிடங்களைக் கண்களுக்காக ஒதுக்க வேண்டும். கண்களை மூடி, மூடித் திறப்பது ஓரளவுக்கு கண்களை ரிலாக்ஸ் செய்யும்.

பயணத்துக்குப் பிறகு சிலருக்குக் கண்கள் களைத்து, வீங்கி, சிவந்து காணப்படும். சரியான தூக்கமின்மையே அதற்குக் காரணம். அப்படிப்பட்ட நேரத்திலும்
10 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வெடுப்பது அவசியம்.

வெயிலில் வெளியே செல்லும் போது, கண்களுக்கும் பாதுகாப்பு அவசியம். சூரியனின் புற ஊதாக் கதிர்கள், கண்களைப் பாதிக்கும். அதனால் கண்களைப் பாதுகாக்கும் நல்ல கண்ணாடி உபயோகிக்க வேண்டும். ‘நான் ரெஃப்ளெக்டிவ்’ கண்ணாடிகளாக இருந்தால், சூரியனின் யுவி கதிர்களின் தாக்கத்திலிருந்து,
கண்களைப் பாதுகாக்கும்.

கண்களுக்கு தவறாமல் மேக்கப் போடும் பழக்கமுள்ளவர்கள், இரவில் எக்காரணம் கொண்டும் அந்த மேக்கப்புடன் தூங்கக் கூடாது. அப்படியே விட்டால், கண்களைச் சுற்றி கட்டிகள் வரலாம். அந்த இடத்துத் தசைகள் பலவீனமடையலாம். எனவே கண்களுக்கான மேக்கப்பை அகற்றவென்றே கிடைக்கிற ‘ஐ மேக்கப் ரிமூவர்’அல்லது கற்றாழை ஜெல் உபயோகித்து, கண்களில் போட்ட மேக்கப்பை நீக்கி விட்டே தூங்கவும். அப்படி அகற்றும் போதும், கண்களை அழுத்தித் தேய்க்காமல், மென்மையாகத் துடைத்து எடுக்க வேண்டும்.

சிலர் ஏதேனும் பிரச்னைகளுக்காக கண்களுக்கு டிராப்ஸ் உபயோகிப்பார்கள். மருத்துவர் எத்தனை நாட்களுக்கு உபயோகிக்கச் சொன்னாரோ, அத்தனை நாட்கள் மட்டும்தான் அதை உபயோகிக்க வேண்டும். பிறகும் தொடர்வது பாதுகாப்பற்றது.

சிலருக்கு கண்கள் வறண்டும், எப்போதும் அரிப்புடனும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மருத்துவரைப் பார்த்து, ஆலோசனை பெறுவதே நல்லது.

வெளிச்சம் குறைந்த இடத்தில் படிப்பது, படுத்துக் கொண்டும், பயணத்தின் போதும் படிப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் டி.வி. முன் இருப்பது போன்றவை கண்களுக்கு நல்லதல்ல. ஒரே இடத்தை அல்லது காட்சியை நீண்ட நேரம் வெறித்துப் பார்ப்பதால், கண்கள் வறண்டு போகலாம். ஒவ்வொரு அரை மணிக்கு ஒரு முறையும் 30 முறைகள் கண்களை மூடி மூடித் திறக்க வேண்டும். இதனால் கண்களுக்குள் ஈரப்பதம் இருப்பதுடன், போதிய ஆக்சிஜனும் கிடைக்கும்.

நீச்சல் பழக்கமுள்ளோர், நீந்தும் போது, தண்ணீரில் உள்ள குளோரின் கண்களைத் தாக்காமலிருக்க, கண்ணாடி அணிய வேண்டும்.

குடி மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கண்களுக்கடியில் பை போலவும், சுருக்கங்களும் இருக்கும். புகைப்பவர்கள் பக்கத்தில் இருந்து, அந்தப் புகையை சுவாசிப்பவர்களுக்கும் இப்படி வரலாம் என்பதால், இந்தப் பழக்கங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

பார்லர் சிகிச்சை

கருவளையங்களுக்கான பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. கண்களுக்கு அடியிலான சருமமானது மிகவும் மென்மையானது என்பதால், அங்கே அதிக அழுத்தம் இல்லாத மசாஜ் செய்யப்பட வேண்டும். அது தெரியாமல் பல இடங்களிலும் அழுத்தி மசாஜ் செய்வார்கள். அப்படிச் செய்வது கருவளையங்களை
இன்னும் அதிகமாக்கும். கருமையைப் போக்கும் பிரத்யேக ஃபேஷியல்களும் செய்யப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியத்துக்கு 5 நிமிடங்கள்!! (மருத்துவம்)
Next post புருவங்கள் நரைக்குமா? (மகளிர் பக்கம்)