கொழும்பு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையிலிருந்து கொழும்பு நகருக்குக் கிளம்பிய பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து இன்று காலை 302 பேருடன் ஏர் லங்கா விமானம் கொழும்பு நகருக்குக் கிளம்பியது. விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்கிய சமயத்தில், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், இலங்கை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. சில நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என தெரிவித்தார். இதையடுத்து ஏர் லங்கா விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை முழுமையாக சோதனையிட்டனர். இதில் குண்டு எதுவும் சிக்கவில்லை. அத்தகவல் புரளி எனத் தெரிய வந்தது. இதனால் சில நிமிட தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பிச் சென்றது.