கமலம பாத கமலம! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 54 Second

‘உடலின் மற்ற பாகங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பாதங்களுக்கு நாம் கொடுப்பதில்லை. ஆனால், பாதங்களிலும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன’’ என்கிறார் பாத சிகிச்சை சிறப்பு மருத்துவரான ராஜேஷ் கேசவன்.

பாத வெடிப்புகள், ஆணிக்கால், காயங்கள், ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போவது, விரல்களுக்கிடையில் பூஞ்சைகள் உருவாவது போன்ற பிரச்னைகளைப் பற்றியும் அதற்கான எளிய தீர்வுகளையும் இங்கே பகிர்ந்துகொள்கிறார் ராஜேஷ்.

பாத வெடிப்புகளை குணப்படுத்த…

பாதங்களில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போகும் காரணத்தாலேயே பெரும்பாலும் வெடிப்புகள் ஏற்படுகின்றன. ஈரப்பதம் தரும் க்ரீம்களை தொடர்ந்து தடவி வந்தாலே இந்த வெடிப்புகள் மறைந்துவிடும். காலணிகள் அணிவதைத் தவிர்க்கக் கூடாது என்பதும் முக்கியம். வறட்சியைப் போக்க சிலர் எண்ணெய் தடவுவார்கள். எண்ணெய் தடவிக் கொள்ளும்போது எறும்புகள், எலி போன்றவை கடிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் எண்ணெய் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.

டைல்ஸ் தரைகளில் நடக்கும்போது…

சமமற்ற நிலப்பரப்பில் நடப்பதற்கேற்ற வகையில்தான் நம் பாதங்கள் அமைந்துள்ளன. ஆனால், வழுவழுவென அமைந்திருக்கும் இடங்களில் நடக்கும்போது பாதத்துக்கு சரிவிகித அழுத்தம் கிடைப்பதில்லை. இதனால்தான் டைல்ஸ் தரையில் நடக்கும்போது பாதங்களில் வலி ஏற்படுகிறது. வீட்டுக்குள் அணிந்துகொள்ளும் வகையில் சுத்தமான தனி காலணிகளைப் பராமரித்து, வீட்டுக்குள்ளும் காலணிகளை அணிந்துகொள்வதன் மூலம் வலி ஏற்படாமல் தவிர்க்கலாம்.

ஆணிக்கால்…

ஏற்கனவே சொன்னதுபோல சரிவிகிதத்தில் பாதங்களுக்கு அழுத்தம் கிடைக்காமல், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அழுத்தம் அதிகமாக ஏற்படும்போதுதான் ஆணிக் கால் உருவாகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு ஆணிக்கால் உருவாகும் வாய்ப்பு அதிகம். பாதத்தில் இருக்கும் கொழுப்பு நகர்வதால் பாதத்தின் வடிவம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறிது மாறும். இதனால் பாதத்தின் எலும்புக்கும் தரைக்கும் நடுவில் உள்ள தோல் மாட்டிக்கொண்டு தடிமனாகிவிடும். இதுதான் ஆணிக்காலாக மாறுகிறது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஆணிக் காலுக்கும் சதைக்கும் இடையில் உராய்வு ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அது நாளடைவில் வெளியில் தெரியாத புண்ணாகவும் மாறலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பிலும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி, அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலையை இந்த உள் புண் உண்டாக்கிவிடும். அதனால், ஆணிக்காலை சாதாரணமாக நினைக்கக் கூடாது.

வீட்டுக்குள் செருப்பா?

நம் கலாசாரப்படி வீட்டுக்குள் செருப்பு அணிவதை தவறான, சுகாதாரமற்ற பழக்கமாக நினைக்கிறோம். இருப்பினும், வீட்டுக்குள் பயன்படுத்தக்கூடிய வகையில் தனியாக ஒரு ஜோடி காலணிகளைப் பராமரிப்பதே நல்லது. முக்கியமாக, நீரிழிவு நோயாளிகள் வீட்டுக்குள் எங்காவது இடித்துக் கொண்டாலோ, குண்டூசி, ஸ்டேப்ளர் என்று ஏதாவது வழியில் பாதங்களில் காயம் பட்டுவிட்டாலோ ஆறுவது சிரமம் என்பதால், வீட்டுக்குள் காலணிகள் அணிவது பலவிதங்களிலும் பாதுகாப்பு. பாதங்களில் பிரச்னை என்று வருகிறவர்களுக்கு வீட்டிலும் காலணிகள் அணிந்துகொள்ளுங்கள் என்பதையே முக்கிய அறிவுரையாகச் சொல்லி வருகிறோம்.

மூன்று நரம்புகள் மோட்டார் நரம்புகள், சென்சரி நரம்புகள், அட்டானமிக் நரம்புகள் என்று மூன்று முக்கிய நரம்புகள் பாதங்களில் இருக்கின்றன. பாதங்களின் தசைகளை மோட்டார் நரம்புகளும், தொடு உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்லும் வேலையை சென்சரி நரம்புகளும், தோலுக்கு ஈரப்பதத்தைத் தரும் வேலையை அட்டானமிக் நரம்புகளும் செய்கின்றன. மோட்டார் நரம்புகள் பாதிக்கப்பட்டால் விரல்கள் மடங்கிப் போய், விரல்களுக்கிடையே இடைவெளியே இல்லாமல் ஈரப்பதம் தங்கிவிடும். இதனால் பூஞ்சைகள் தொற்று உண்டாகி புண்ணாகும் வாய்ப்பு உண்டு. சென்சரி நரம்புகள் பாதிக்கப்பட்டாலும் பாதங்கள் மரத்துப்போகும். அட்டானமிக் நரம்புகள் பாதிக்கப்பட்டால் ஈரப்பதம் குறைந்து பாதங்களில் வெடிப்புகள் ஏற்படலாம்.

அது என்ன ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்?

கால்களை ஒரே இடத்தில் அமைதியாக வைத்திருக்க சிலரால் முடியாது. கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள் அல்லது ஏதாவது இயக்கம் கால்களில் இருந்துகொண்டே இருக்கும். இதைத்தான் ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் என்கிறார்கள். நம் நாட்டில் இந்த பிரச்னை அவ்வளவாக இல்லை. இது ஒருவகையில் மனரீதியான பிரச்னையாகவும் இருக்கலாம்.

தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை

நரம்புகளில் அதிக பாதிப்பு, வலி, புண் போன்றவை இருந்தால் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யலாம். நீரிழிவு நோயாளிகளுக்குக் காயங்கள் ஏற்பட்டால் ஆறாது. அதனால், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

கொஞ்சம் டிப்ஸ்…

பாதத்தில் ஏதாவது ஆணி குத்தினாலோ, காயம் பட்டிருந்தாலோதான் ஊன்றிக் கவனிப்போம். பாதிக்கப்பட்ட பிறகு பாதங்களை கவனிப்பதை மாற்றி, தினமும் தூங்கச் செல்லும்முன் பாதங்களைக் கவனிக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். குளிக்கும் போது பாதங்களையும் மென்மையான சோப் கொண்டு சுத்தம் செய்வது நல்லது. விரல் இடுக்கில் ஈரப்பதம் தங்கிவிடாமல் சுத்தமாகத் துடைத்துவிட வேண்டும். ஈரப்பதம் தரும் க்ரீம்களை அடிப்பாகம், மேல்பாகத்தில் தடவிக் கொள்ளலாம். விரல் இடுக்கில் தடவக் கூடாது. நகத்தை மிகவும் ஒட்டி நெருக்கமாக வெட்டக் கூடாது. நெருக்கமாக வெட்டினால் நகம் தசைக்குள் வளரும் வாய்ப்பு உண்டு.

பாதத்தில் வீக்கம், வலி, சிவந்து காணப்படுவது, உணர்ச்சி இல்லாமல் மரத்துப் போயிருப்பது, பாத வெடிப்பு, காயங்கள் போன்றவை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பாதங்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே, அதற்கேற்றவாறு நடைப்பயிற்சி செல்ல வேண்டும். காலணிகள் அணியாமல் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.

காலணிகளைத் தேர்ந்தெடுக்கும் முன்…

காலணிகள் வாங்கும்போது உட்கார்ந்துகொண்டு தேர்ந்தெடுத்தால் அளவு சிறிது மாறும். அதனால், நின்றுகொண்டு தேர்ந்தெடுப்பதே சரியான முறை. காலணிகள் வழுக்காத வகையில் இருக்க வேண்டும். அதிகம் மடங்குகிற காலணிகளையும் தவிர்க்க வேண்டும்.

பாதத்தைத் தொடும் காலணியின் பகுதி மென்மையாக இருக்க வேண்டும். நரம்புப் பிரச்னை உள்ளவர்களுக்கு காலை வேளைகளில் பாதங்களில் கொஞ்சம் வீக்கம் இருக்கும். அதனால், மாலை வேளைகளில் காலணிகள் வாங்குவதே சரியானது.

நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்கள் சாக்ஸ் அணிந்தபிறகு காலணிகள் அணிவது நல்லது. இதன்மூலம் பாதத்துக்கும் செருப்புக்கும் இடையில் ஏற்படும் உராய்வைத் தவிர்க்க முடியும்.

விரல்களால் அழுத்திப் பிடிக்கிற வகையில், விரல்களை அழுத்துகிற வகையான காலணிகளைத் தவிர்க்க வேண்டும். அக்குபங்சர் என்பது மிகவும் நுட்பமான அறிவியல்தான். ஆனால், கடைகளில் விற்கப்படும் அக்குபங்சர் காலணிகளால் எந்தப் பயனும் கிடைப்பதில்லை.

அதனால், சாதாரண காலணிகளைத் தேர்ந்தெடுப்பதே போதுமானது. ஷூ தேர்ந்தெடுப்பதற்கும் இதே வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முக அழகிற்கு குங்குமப்பூ!! (மகளிர் பக்கம்)
Next post பழங்களை வேக வைத்து சாப்பிடுவது ஏன்?! (மருத்துவம்)