ஒன்றறை மில்லியன் பசுக்கள் இலங்கைக்கு வரும்!! (கட்டுரை)
உள்நாட்டு திரவப் பால் தேவையை 2024 ஆம் ஆண்டளவில் முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில் தூர நோக்குடைய திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பால் மாவுக்கு காணப்படும் தேவையை இல்லாமல் செய்யும் நோக்கில், இலங்கையை திரவப் பால் உற்பத்தில் முழுமையாக தன்னிறைவடையச் செய்யும் வகையில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது 1.2 மில்லியன் கறவைப் பசுக்கள் காணப்பட்ட போதிலும், அவற்றில் 250000 பசுக்களிலிருந்து மாத்திரமே பால் பெறப்படுவதாகவும், வருடாந்த மொத்த பால் தேவையான 7200 மில்லியன் லீற்றர்களில் 4600 மில்லியன் லீற்றர்கள் மாத்திரமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்த நான்கு வருடங்களில் மூன்று முறைகளைப் பின்பற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதனூடாக தேசிய கேள்வியின் 80 சதவீதம் வரை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் கூறினார்.
பசுவொன்றிலிருந்து சராசரியாக பெறப்படுடும் பாலின் அளவை தற்போதுள்ள 3 லீற்றர்களிலிருந்து 5 லீற்றர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அவசியமான சகல உணவு, நீர் மற்றும் கால்நடை தீன்கள் போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நடவடிக்கைக்காக நாம் 400 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், மேலும் 300 மில்லியனை கட்டமைப்பு சீராக்க நிகழ்ச்சித்திட்டத்தினூடாக பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
அடுத்ததாக செயற்கை முறையில் கருக்கட்டலுக்குட்படுத்த முடியாத சுமார் 200,000 பசுக்களில் வெற்றிகரமாக செயற்கை முறையில் கருக்கட்டலை மேற்கொள்வதற்கு அவசியமான பயிற்சிகளையும் அறிவூட்டலையும் வழங்க எதிர்பார்க்கின்றோம்.
மூன்றாவதாக 1.5 மில்லியன் கறவைப் பசுக்களை நாட்டின் பாரியளவில் இயங்கும் பாலுற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கின்றோம்.
Average Rating