அமெரிக்க மக்கள் தொகை நாளை 30 கோடியை எட்டுகிறது
அமெரிக்காவின் மக்கள் தொகை செவ்வாய்க்கிழமை 30 கோடியை எட்ட இருக்கிறது. செவ்வாய்க்கிழமை காலை 7.46 (இந்திய நேரப்படி மாலை 5.16) மணிக்கு மக்கள் தொகை 30 கோடியை எட்டும் என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், அமெரிக்காவில் குடியேறி குடியுரிமை பெறுவோர் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த அமைப்பு இதைக் கணக்கிட்டுள்ளது. அமெரிக்காவில் 7 விநாடிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது; 13 விநாடிக்கு ஒருவர் இறக்கிறார்; 31 விநாடிக்கு ஒருவர் குடியேறுகிறார். இதனால் மொத்த மக்கள் தொகை 11 விநாடிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அதிகரிக்கிறது என்று அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இதன்படி அந்த 30-வது கோடி அமெரிக்கர், புதிதாகப் பிறக்கப் போகும் குழந்தையா, அல்லது அமெரிக்காவில் குடியேற வந்து கொண்டிருக்கும் மனிதரா, யார் அவர்? என்பதை இப்போது சொல்வது இயலாது என அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் பக்னர் கூறினார்.
சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட மூன்றாவது நாடு என்ற பெருமையை அமெரிக்கா இதன் மூலம் பெறப்போகிறது.
அமெரிக்க மக்கள் தொகை கடந்த 1967 நவம்பர் 20-ல் 20 கோடியை எட்டியது. அப்போது அமெரிக்க அதிபராக லின்டன் பி.ஜான்சன் இருந்தார். அங்கு கலர் டி.வி. மோகம் தலையெடுத்துக் கொண்டிருந்தது. வியத்நாம் போரில் அது தீவிரமாக ஈடுபட்டிருந்தது.
இன்றைய அமெரிக்காவோ, அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியில் இருக்கிறது. ஐபாட் மோகத்தில் மூழ்கித் திளைக்கிறது. ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய இரு முனைகளில் அது போரில் ஈடுபட்டுள்ளது.