பறக்கும்போது பத்திரமா பார்த்துக்கோங்க!! (மருத்துவம்)
‘நடுவானில் விமானிக்கு மாரடைப்பு. அவசரமாகத் தரையிறக்கப்பட்டது விமானம்’, ‘விமானத்தில் பயணிக்கு திடீர் மாரடைப்பு’ போன்ற செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்க்கிறோம். மாரடைப்பு ஏற்படுவதற்கும் விமானப் பயணத்துக்கும் அப்படி என்ன தொடர்பு? விமானப் பயணம் போகிற எல்லோருக்குமே மாரடைப்பு வர சாத்தியம் உண்டா? இதய சிகிச்சை மருத்துவர் சிவக்குமாரிடம் கேட்டோம்… ‘‘உயரமான கட்டிடங்களுக்கோ மலையின் உச்சிக்கோ செல்லும்போது வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற உணர்வுகள் சிலருக்கு ஏற்படுவதைப் பார்த்திருப்போம்.
விமானத்தில் செல்வது என்பது இதைவிட ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் மேற்கொள்ளும் பயணம் என்பதால் சிலரின் உடல்நிலையால் அந்த சூழலை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. முக்கியமாக, தரையில் நம் சுவாசத்துக்காகக் கிடைக்கும் ஆக்சிஜன் அளவு மேலே செல்லும்போது குறையும். 8 ஆயிரம் அடி, 12 ஆயிரம் அடி என செல்லச்செல்ல ஆக்சிஜன் அளவும் குறைந்து கொண்டே போகும். இதை சமாளிக்க விமானத்தில் ஆக்சிஜன் அளவைப் பராமரித்து வந்தாலும் சிலருக்கு உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விடும். இதனால் உடலின் உறுப்புகளுக்குச் செல்லும் பிராண வாயு குறைந்து, அதன் தொடர்ச்சியாக மாரடைப்பு ஏற்படுகிறது.
இந்தக் காரணம் தவிர்த்து நீண்ட நேர பயணம் மேற்கொள்வது, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாவது, உடமைகள் பரிசோதனை மற்றும் விசா, பாஸ்போர்ட் சரி பார்த்தலால் ஏற்படுகிற மன அழுத்தம் போன்றவையும் மாரடைப்பு ஏற்படுவதற்கும் காரணங்களாக அமையலாம். அதனால், விமானப் பயணம் செய்யும் முன் உடல்நிலையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க முன்னரே விமானநிலையம் சென்றுவிடுவதும், விமானப் பயணத்தின்போது மது அருந்துவதைத் தவிர்ப்பதும் பாதுகாப்பானது.விமானப் பயணம் போகிற எல்லோருக்குமே மாரடைப்பு வருவதில்லை. ஒருசிலருக்கே இதுபோல் பிரச்னை வருகிறது. அப்படியே மாரடைப்பு வந்தாலும் மருத்துவ வசதிகள் விமானத்தில் தயாராகவே இருக்கும் என்பதால் பயம் வேண்டியதில்லை.’’
Average Rating