இனி காத்திருக்க வேண்டியதில்லை!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 52 Second

விலங்குகளின் இதய வால்வுகள் மனிதனுக்குப் பொருந்துமா? ‘பொருந்தும்’ என்கிறார் டாக்டர் கே.எம்.செரியன். இன்று இந்தியா முழுவதும் ’பைபாஸ் சர்ஜரி’ பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணமான இவர், உலகப்புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். இந்தியாவின் முதல் இதய கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவை சிகிச்சையை 1975லேயே செய்தவர். இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையும் இவரால்தான் செய்யப்பட்டது. குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகளின் முன்னோடியும் இவரே. இவ்வளவு பெருமைகளுக்கும் சொந்தக்காரரான டாக்டர் செரியன் தன்னுடைய மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

“நான் 45 ஆயிரங்களுக்கும் அதிக இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்திருந்த போதும், 1975ல், இந்தியாவின் முதல் இதய கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவை சிகிச்சையை செய்ததுதான் மறக்க முடியாத அனுபவம். 39 வயதே நிரம்பிய காஜாமொய்தீன், திடீரென மார்பு வலியால் துடித்தார். மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்தது. இசிஜி பார்த்த போது அவருக்கு இஸ்கிமிக் இதயநோய் (Ischaemic heart disease) இருப்பது உறுதியானது. கரோனரி ஆர்டரிகளுக்கான ஆஞ்சியோகிராம் பார்த்தபோது, அங்கு அடைப்புகள் இருந்ததால் கரோனரி பைபாஸ் சிகிச்சையை உடனடியாக செய்ய வேண்டிய நிலையில் இருந்தார்.

பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தேன். இது முடிந்த சில நாட்களில் டெய்ஸி டிகோஸ்டா என்னும் பெண்மணிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தேன். இவர்தான் இந்தியாவில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் பெண்மணி. இந்த இரு அறுவை சிகிச்சைகளும் அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டன’’ என்கிற டாக்டர் செரியன், இதய அறுவை சிகிச்சைத் துறையில் வரவிருக்கும் நவீன வசதிகள் குறித்து தொடர்கிறார்…‘‘

இதயச் செயலிழப்பினால் அழிந்த செல்களை ஸ்டெம் செல்களை பயன்படுத்திப் புதுப்பிப்பதன் மூலம், இதயச் செயலிழப்பை சரிசெய்ய முடியும். இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை முறையை எங்கள் மருத்துவமனையில் பரிசோதனை முறையில் செய்வதற்காக தேசிய விஞ்ஞான கழகத்தில் பதிவு செய்துள்ளோம். ஜேனோகிராப்ட்ஸ் (Xenografts) எனப்படும் மாடு, பன்றி போன்ற விலங்குகளில் இருந்து பெறப்படும் நாளங்கள், வால்வுகளை நோயாளிக்கு பொருத்தி இதயம் சம்பந்தமான பிரச்னைகளை குணமாக்க முடியுமா என்பதையும் ஆராய்ந்து வருகிறோம்.

இந்த ஆராய்ச்சிக்காக மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறோம். இந்த முயற்சி வெற்றி பெற்றால் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சையில் பொருத்தப்படும் செயற்கை வால்வுகளை நாமே தயாரித்துக் கொள்ள முடியும். செயற்கை இதய வால்வுகளுக்காக வெளிநாடுகளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது’’ என்று இதய நோயாளிகளின் வயிற்றில் பாலை வார்க்கிறார்!

இதய அறுவை சிகிச்சைத் துறையில் இரு முக்கிய விஷயங்களை ஆராய்ந்து வரும் டாக்டர் செரியன் ஏற்கனவே ஆற்றிய பணிகளை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கியுள்ளது. பல உலக நாடுகள் இவரது சேவையை பாராட்டி பல உயரிய பட்டங்களையும் பரிசுகளையும் வழங்கியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதய வால்வு கோளாறுகள்!! (மருத்துவம்)
Next post பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா? (அவ்வப்போது கிளாமர்)