விடுதலைப் புலிகள் வானொலி மீது குண்டு வீச்சு!
Read Time:1 Minute, 16 Second
விடுதலைப்புலிகள் நடத்திவரும் வானொலி நிலையத்தின் மீது சிறிலங்க விமானப்படையின் கிஃபீர் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன! புலிகளின் தலைமையகம் உள்ள கிளிநொச்சியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள கொக்காவில் என்ற இடத்தில் தமிழீழம் வானொலி நிலையம் இயங்கி வருகிறது. இதிலிருந்து புலிகளின் குரல், தமிழீழ வானொலி உள்ளிட்ட 3 சேவைகள் ஒலிபரப்பப்படுகிறது. இந்த வானொலி நிலையத்தை குறிவைத்து சிறிலங்க விமானப்படை விமானங்கள் இன்று காலை 9.30 மணியளவில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் ஒலிபரப்பு கோபுரம் இடிந்து விழுந்தது. ஒலிபரப்புக் கருவிகள் சேதமடைந்தன. வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்த 2 ஊழியர்கள் காயமுற்றனர் என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.