தவறல்ல…ரிகர்சல்!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 42 Second

‘‘உச்ச கட்டத்தை அனுபவிக்க ஆண்களுக்கு மிகவும் விலை உயர்ந்த வழி தங்கள் பணப்பையைத் திறப்பது… மலிவான வழி கண்களை மூடிக் கொள்வது…’’ – மோகோகோமா மோகோநோவனா (மானுடவியலாளர் / விமர்சகர்)

செல்வம்… காமரசம் சொட்டும் ஆங்கில பத்திரிகைகளைப் படிப்பதும் டி.வி.டி.க்களை பார்ப்பதும் அவன் வழக்கம். பார்த்த பாலியல் காட்சிகளை நினைத்து சுய இன்பம் செய்வான். ஒருநாள் இரவு டி.வி.யில் போலி மருத்துவர் ஒருவரின் விளம்பர நிகழ்ச்சியைப் பார்த்தான். ‘சுய இன்பம் உடலைக் கெடுத்து நரம்புத் தளர்ச்சியைக் கொடுக்கும், ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்தும்…’ என்ற ரீதியில் அவர் பேச, குற்ற உணர்ச்சிக்கு ஆளானான். பல நாட்கள் சுய இன்பத்தில் ஈடுபட்டிருப்பதால், தன்னால் கண்டிப்பாக செக்ஸில் ஈடுபட முடியாது என்று நம்ப ஆரம்பித்தான். பெற்றோர் அவனுக்குப் பெண் பார்த்தார்கள்.

அவனோ திருமணத்தைத் தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தான். ஒருவழியாக திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து ஒரு பெண்ணை நிச்சயமும் செய்தார்கள். திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் ‘திருமணம் வேண்டாம்’ என்று எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடிப் போனான் செல்வம். ‘சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும்’ என்ற நம்பிக்கை படித்தவர்கள் மத்தியில் கூட இருக்கிறது. 11 மணிக்கு மேல் டி.வி. சேனல்களில் பிரசங்கம் செய்யும் போலி மருத்துவர்கள்தான் இதற்கான முழுக் காரணகர்த்தாக்கள்.

சுய இன்பத்தை ஆங்கிலத்தில் ‘masterbation’ என்கிறார்கள். இதன் அர்த்தம் ‘தன்னைத்தானே அசுத்தப்படுத்திக் கொள்ளுதல்.’ சுய இன்பம் குறித்து தவறான கருத்துகளே ஆரம்ப காலம் தொட்டு நிலவுகின்றன. சார்லஸ் ஆல்ஃபிரெட் கின்சே என்ற ஆராய்ச்சியாளர் ஆண்களின் செக்ஸ் நடத்தை குறித்த ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் ‘95 சதவிகித ஆண்கள் ஒரு முறையாவது சுய இன்பம் செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மற்ற 5 சதவிகித பேர் பொய் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதிலிருந்து எல்லோருமே சுய இன்பத் தில் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவாகிறது. இது மனிதனின் இயல்பான வெளிப்பாடு. அதற்காகக் குற்றவுணர்வு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 13-14 வயதில் ஆணின் உடல், உடலுறவுக்கு தயாராகிவிடுகிறது. பெண்கள் மீது கவர்ச்சியும் கிளர்ச்சியும் ஏற்படுகிறது. திருமணம் நடக்கும் வரை உடல் வேட்கையைத் தணிக்க சுய இன்பம் மட்டுமே வடிகால். விலைமாதர்களிடம் போனால் சமுதாயம் தவறாக நினைத்துக்கொள்ளுமோ, பால்வினை நோய் வந்து விடுமோ என பயப்படுகிறான். இதைச் செய்தால் கை, கால்களில் நடுக்கம் ஏற்படும் என்பது கட்டுக்கதை.

உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் கூட கை, கால்களில் நடுக்கம் ஏற்படும். ‘ஓ.சி.டி.’ எனப்படும் அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர் (எண்ண சுழற்சி நோய்) உள்ளவர்களுக்கு அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடத் தோன்றும். இவர்கள் மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். சுய இன்பம் செய்வதால் ஆண்மைக் குறைபாடோ, விறைப்புத்தன்மை குறைவதோ ஏற்படாது. ‘58 சதவிகித பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள், 82 சதவிகித பெண்கள் சுய இன்பம் என்று தெரியாமலேயே அதைச் செய்கிறார்கள்’ என்கிறது உலக அளவிலான ஓர் ஆராய்ச்சி.

சுய இன்பம் செய்வதை நிறுத்த நினைப்பவர்கள் செய்ய வேண்டியது…

அரை நிர்வாணப் படங்களைத் தாங்கிவரும் பத்திரிகைகளைப் படிப்பதை நிறுத்தவும்.ஆபாசப் படங்கள் வந்தால் சேனலை மாற்றவும். இசை கேட்டல், உடற்பயிற்சி போன்ற ஆக்கப்பூர்வ வேலைகளில் ஈடுபடவும். சுய இன்பம் செய்வதை குற்றமாக நினைப்பதைத் தவிர்க்கவும். அது உடலுறவுக்கான ரிகர்சலே தவிர தவறான செயல் அல்ல. இயற்கையான விஷயத்தை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டிய அவசியம் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன நலம்!! (மகளிர் பக்கம்)
Next post குழந்தைகளை பாதிக்கும் பெற்றோரின் சண்டைகள்!! (மருத்துவம்)