சாம்பியன்ஸ் கோப்பை : சிறிலங்கா 253 ஆல் அவுட்!
பூவா – தலையா வென்று ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்துடன் சுறுசுறுப்பாக ஆடிய சிறிலங்கா அணி, பாகிஸ்தான் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது! ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று துவங்கிய 3வது சுழற்சுற்றுப் போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள சிறிலங்காவும், பாகிஸ்தானும் மோதின.
பூவா – தலையா வென்று முதலில் களமிறங்கிய சிறிலங்க அணி அருமையான துவக்கத்தைப் பெற்றது. சனத் ஜெயசூர்யாவும், உப்புல் தாரங்காவும் அதிரடியாக அடித்தாடி ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்கள் இருவரும் 9.1 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 48 ரன்கள் எடுத்திருந்த ஜெயசூர்யா ஆட்டமிழந்தார்.
உப்புல் தாரங்கா 38 ரன்களுக்கும், ஜெயவர்தனே 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். சங்ககாராவும், அட்டபட்டுவும் மிகச் சிறப்பாக விளையாடி முறையே 39, 36 ரன்களை எடுத்தனர். ஆனால் அதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென்று சரியத் துவங்கியது.
மஹ்ரூஃப் 22 ரன்களுக்கும், சமிந்தா 15 ரன்களுக்கும் அப்துல் ரசாக்கின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 49.2 ஓவர்களில் 253 ரன்களுக்கு சிறிலங்கா அணி ஆட்டமிழந்தது.
பன்முக ஆட்டக்காரர் அப்துல் ரசாக் 7.2 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகுளையும், சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் மாலிக் 8 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.