இளம்வயதிலேயே மாரடைப்பு!! (மருத்துவம்)
முன்பு நாற்பது வயதுக்கு மேல் வந்த மாரடைப்புகள் இப்போது பதின் பருவத்திலேயே வருகிறது. சமீபகாலமாக மாரடைப்பு என்று வருகிற இள வயது ஆண்களை அதிகம் சந்திக்கிறேன். இந்த நிலையை மாற்ற வேண்டும்,அதிக வியர்வையோடு, நெஞ்சுவலி என்று சொல்லிக்கொண்டு, 19 வயதே ஆன முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன் ஒருவன் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அந்த பையனின் இ.சி.ஜி ரிப்போர்ட்படி அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஆன்ஜியோகிராம் சோதனையிலும் ரத்தக்குழாயில் 90 சதவீத அடைப்பு இருந்தது. அந்த மாணவனுக்கு Angioplasty முறையில் ரத்தக்குழாயை பலூன் போல விரிவடையச்செய்து ஒரு குழாய் மூலம் அடைப்பை நீக்கினேன்.
வழக்கமாக ஏற்படும் மாரடைப்பானது உடலில் சேரும் கொழுப்பு ரத்தக்குழாயில் படிவதால், இதயத்துக்குச் செல்லும் ரத்தஓட்டம் தடைபடுவதால் ஏற்படுகிறது. ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும்போது மிதமானது முதல் கடுமையான மாரடைப்பு ஏற்படுகிறது.
சாதாரணமாக ரத்தக்குழாயில் கொழுப்பு படிவது என்பது வயது அதிகரிப்பதால் அல்லது ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாவதால் ஏற்படும். ஆனால், தற்போது இளவயதிலேயே ஏற்படும் மாரடைப்புக்கு தவறான வாழ்க்கை முறையே பெரிதும் காரணமாக இருக்கிறது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம், தவறான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லாததே முக்கிய காரணமாக இருக்கிறது.
மேலும், பரம்பரைத்தன்மை காரணமாக ஈரலிலும், ரத்தக் குழாயிலும் கொழுப்பு படிவதாலும் மாரடைப்பு ஏற்படலாம். இதயநோய் பாதிப்பு பரம்பரையாய் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவர்களில், முந்தைய தலைமுறையினருக்கு ஒரு 40 வயதில் மாரடைப்பு வந்திருந்தால் இந்தத் தலைமுறையினருக்கு 20 வயதிலேயே வரக்கூடும். கருத்தடை மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பவர்கள், இதயத்தமனிகள் அசாதாரணமாக அமையப் பெற்றவர்களுக்கும் இள வயதிலேயே மாரடைப்பு வருவதால் கவனம் அவசியம்.’’
Average Rating