டெலி மெடிசின் தான் அடுத்த கட்டம்!! (மருத்துவம்)
‘120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 20 சதவிகிதம் பேருக்குத்தான் சிறுநீரகம், இதயம், நுரையீரல் போன்ற சிறப்பு மருத்துவர்களின் சேவை கிடைக்கிறது. மீதியுள்ள 80 சதவிகிதம் பேருக்குக் கிடைப்பதில்லை. மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவரை சந்திக்க முடியாத நிலைமை, போக்குவரத்து சிரமங்கள் போன்ற காரணங்களால் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் உண்டாகும் இந்த இடைவெளியை‘டெலிமெடிசின் சிகிச்சைமுறை’ மூலம் சமாளிக்க முடியும்’’ என்கிறார் நரம்பியல் சிறப்பு மருத்துவரான கணபதி. இது தொடர்பாக தான் மேற்கொண்ட ஆய்வு பற்றியும் விளக்குகிறார்.
‘‘இந்திய அளவில் 3,666 நரம்பியல் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 30 சதவிகிதம் பேர் பெருநகரங்களிலும், 30 சதவிகிதத்தினர் மாநிலங்களின் தலைநகரங்களிலும், 28 சதவிகிதம் பேர் வளர்ந்துவரும் நகரங்களிலும் இருக்கிறார்கள். சிறுநகரங்களில் வெறும் 3 சதவிகிதம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். இது ஒரு தோராயமான உதாரணம்தான்.
இந்தப் பிரச்னையைத் தீர்க்க எதிர்காலத்தில் நமக்கு ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் தேவைப்படும். பெரிய மருத்துவமனைகள் இல்லாதபட்சத்தில் சிறப்பு மருத்துவர்கள் இருக்கவும் வாய்ப்பில்லை. காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டத் தலைநகரங்களிலேயே இதுதான் நிலைமை.சிறப்பு மருத்துவரைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்வது சிரமமானது.
சிலநேரங்களில் அங்கேயே தங்க வேண்டியிருக்கும். டெலிமெடிசின் சிகிச்சையின் மூலம் இந்த சிரமங்கள் இல்லாமலேயே சிகிச்சை பெறமுடியும். நோயாளி எங்கே இருக்கிறாரோ அங்கேயே மருத்துவர் தொழில்நுட்ப உதவியுடன், கணிப்பொறியின் மூலம் செல்ல முடியும். இதற்கு ‘Virtual visit’ என்று பெயர். இந்த வீடியோ கான்ஃப்ரன்ஸ் சிகிச்சையைத்தான் ‘டெலி மெடிசின்’ என்கிறோம்.
இணையதள இணைப்புடன் லேப்டாப், கம்ப்யூட்டர் வசதி இருந்தால் போதும். ஸ்மார்ட் போன்கள் அதிகரித்திருப்பதால் டெலி மெடிசினின் சாத்தியம் இன்னும் அதிகமாகி இருக்கிறது.இதற்கான மென்பொருளில் நோயாளியைப் பற்றிய விவரங்களை மருத்துவர் பதிந்து வைத்துக் கொள்வார். எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளின் ரிப்போர்ட்களை மருத்துவருக்கு அனுப்புவதற்கு இந்த மென்பொருள் உதவுகிறது.
மொபைல் போனில் படம் எடுத்தோ, ஸ்கேன் செய்தோ இணையத்தின் வழியாகவும் அனுப்பலாம். நேரில் பார்ப்பது போலவே, கம்ப்யூட்டர் மென்பொருள் மூலம் மருத்துவரால் தெளிவாகப் பார்க்க முடியும். நேரடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கும் இந்த சிகிச்சைக்கும் அதிகவித்தியாசம் கிடையாது!’’
Average Rating