மெனோபாஸுக்குப் பிறகும் ரத்தப் போக்கா? (மருத்துவம்)
பூப்பெய்துதல் எப்படி பெண்களின் வாழ்க்கையில் இயல்பான ஒரு நிகழ்வோ அதே போன்றதுதான் மாதவிடாய் சுழற்சியின் முடிவு காலமான மெனோபாஸும். 40 முதல் 60 வயது வரை எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண்ணின் மாதவிலக்கு சுழற்சி முற்றுப் பெறலாம். இதுபோல் மாதவிலக்கு சுழற்சி நின்ற பிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும்.
அவர் கீழ்க்காணும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துவார். அதன்படி பொதுப் பரிசோதனை, பிறப்புறுப்பின் வழியே செய்யப்படும் ட்ரான்ஸ்வெஜைனல் அல்ட்ராசவுண்ட், எண்டோமெட்ரியல் பயாப்ஸி, ஹிஸ்ட்ரோஸ்காபி, டி & சி போன்றவை தேவைப்படலாம்.
சிகிச்சைகள் என்ன?
மருத்துவப் பரிசோதனைகளின் முடிவைப் பொறுத்து காரணங்களின் அடிப்படையில் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். அதன்படி ஹார்மோன் அளவுகளில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக ஏற்பட்ட உதிரப்போக்கு என்றால் பெரிய சிகிச்சைகள் தேவை இருக்காது. ஹெச் ஆர் டி எனப்படும் ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி மூலமே தீர்வு காணப்படும்.
எண்டோமெட்ரியல் அட்ராஃபி மற்றும் அட்ராபிக் வெஜினிட்டிஸ் பிரச்சனைகளுக்கு ஈஸ்ட்ரோஜன் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படலாம்.
புற்றுநோய் அல்லாத கட்டிகளால் ஏற்பட்ட உதிரப்போக்கு என்றால் மிதமான சூட்டைச் செலுத்தி செய்யப்படும் cauterization முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு ரத்தப்போக்கு நிறுத்தப்படும்.
புற்றுநோய் காரணமாக ஏற்பட்ட உதிரப்போக்கு என்றால் புற்றுநோயின் நிலை, அது பாதித்துள்ள இடம் போன்றவற்றை பொறுத்து கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை தேவைப்படலாம். மிக மிக அரிதாக சில பெண்களுக்கு கர்ப்பப்பையை நீக்க வேண்டி வரலாம். எனவே மெனோபாஸுக்குப் பிறகு ஏற்படும் ரத்தப்போக்கை எக்காரணம் கொண்டும் அலட்சியப்படுத்தக் கூடாது.
ஸ்பாட்டிங் எனப்படும் மிகக் குறைந்த அளவு ரத்தப்போக்கு இருந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். உங்கள் பாட்டி, அம்மா, தோழிகள் என யாருக்கேனும் இந்த அனுபவம் இருந்து, அது தானாக சரியாகி விட்டதாகவும், இது பயப்படக்கூடிய பிரச்சனை அல்ல என்றும் உங்கள் காதுகளுக்கு வரும் அனாவசிய அறிவுரைகளை தயவுசெய்து புறக்கணித்துவிடுங்கள்.
Average Rating