சிறுமியை ரிஷாட்டுக்கு தெரியாதா? – நேர்காணல் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 26 Second

பொன்னையாவுக்கும் நாகையாவுக்கும் என்ன தொடர்பு?

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி விவகாரத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியடைய முடியாதென ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய தெரிவிக்கிறார்.

சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது முதலே, இந்த விடயத்தை தேடியறிந்து இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளையும் ப்ரனிதா வர்ணகுலசூரிய செய்திருந்தார்.

தமிழ்மிரருக்கு இவர் வழங்கிய நேர்காணலின் முழுவிவரங்கள் வருமாறு:

கேள்வி: எப்படி டயகம சிறுமி ரிஷாட்டின் வீட்டுக்கு வேலை செய்ய வந்தார்?

பதில்: பொன்னையா என்கிற 64 வயதுடைய தரகர் ஊடாகவே சிறுமி, ரிஷாட் வீட்டுக்கு வேலைக்கு அழைத்து வரப்படுகிறார். இதுவொரு பெரிய கதை. பொன்னையாவின் சகோதரி வீட்டில், பொன்னையாவின் மகள் தங்கியிருந்தபோது, சில வருடங்களுக்கு முன்னர், பொன்னையாவுக்குத் தெரியாமல் அவரின் மகளை, வெள்ளவத்தையில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டு வேலைக்கு, பொன்னையாவின் சகோதரியின் கணவரான நாகையா அழைத்து வந்துள்ளார்.

இந்த ஆசிரியர், ரிஷாட்டின் பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்புகளை ரிஷாட்டின் வீட்டுக்குச் சென்று நடத்தி வந்துள்ளார். இந்த ஆசிரியர் தனது வீட்டு வேலைக்கு வந்த பொன்னையாவின் மகளை, ரிஷாட் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். இதன்போதே பொன்னையாவுக்கும் ரிஷாட் வீட்டுக்கும் தொடர்பு ஏற்படுகிறது.

கேள்வி: ரிஷாட் வீட்டுக்கு டயகம சிறுமி எப்போது வந்தார்?

பதில்: சிறுமி எப்போது ரிஷாட் வீட்டுக்கு வந்தார் என்கிற சரியான திகதி தெரியாது என்று பொலிஸார் தெரிவிக்கிறார்கள். ஆனால், கடந்த 2020 நவம்பர் 14ஆம் திகதி, ரிஷாட் வீட்டுக்கு சிறுமி சென்றதாக பொன்னையா கூறுகிறார்.

கேள்வி: இச்சம்பவத்தில் ரிஷாட்டும் அவரது குடும்பத்தாரும் செய்த தவறுகள் என்று எவற்றை சொல்வீர்கள்?

பதில்: சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்கு எடுத்தது முதலாவது தவறு. சிறுமி தங்குவதற்கு வீட்டின் வெளிபுறத்தில் அறை வழங்கப்பட்டதாக சிறுமியின் தாயார் கூறுகிறார். பெண் பிள்ளை என்று கூடப் பார்க்காமல், அவரின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், வீட்டுக்கு வெளியில் தனியாக தங்க வைத்துள்ளார்கள்.

சிறுமிக்கு வழங்கப்பட்ட அறையில் யன்னல்கள் இல்லை எனவும், அது ஒரு சிறிய அறை என்றும், சிறுமியின் உடைகளை வைக்க, ‘காட்போட்’ பெட்டியே வழங்கப்பட்டுள்ளதாக தாயார் கூறுகிறார். சிறுமி தூங்குவதற்கு இருவர் படுத்துக்கொள்ளக் கூடிய இரு தட்டு இரும்புக் கட்டில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. எதற்காக இருவர் தங்கும் கட்டில் வழங்கப்பட்டது?

அந்த வீட்டில் மற்றோர் ஆண் வேலைக்காரரும் இருந்துள்ளார். அவர் எங்கு தங்கியிருந்தார்? சிறுமியின் அம்மா நான்கு தடவைகள் அவரைப் பார்க்க வந்தும் சிறுமி, ரிஷாட்டின் புத்தளம் வீட்டுக்குச் சென்றுள்ளதாக கூறியிருக்கிறார்கள். எதற்காக சிறுமியை அம்மாவிடம் மறைத்து வைத்திருந்தார்கள்?

சிறுமியுடன் வாரத்துக்கு இருமுறை அதுவும் வெறும் ஐந்து நிமிடங்கள் கூட பேசுவதற்கு இடங்கொடுக்கவில்லை என அம்மா கூறுகிறார். அதுவும் அந்த வீட்டில் இருந்த மற்றோர் ஆண் வேலைக்காரரின் தொலைபேசிக்கே அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பின்போதும் கூட, சிறுமி சரியாகப் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

கேள்வி: சிறுமியின் மரணத்தில் பல்வேறு விடயங்கள் மர்மமாக இருக்கின்றன. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: கொழும்பு 07இல் உள்ள ரிஷாட் வீட்டில் மண்ணெண்ணை எப்படி வந்தது. தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமியின் முகம் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தலையில் தீக்காயங்கள் இல்லை. தற்கொலை செய்துகொள்பவர்கள், தலையில் மண்ணெண்ணையை ஊற்றாமல் கவனமாக, உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு பற்றவைத்துக் கொள்வார்களா என சிறுமியின் அம்மா கேள்வி எழுப்புகிறார். மண்ணெண்ணை மகளின் உடலில் ஊற்றி பற்றவைத்து மகளை கொலை செய்துள்ளார்கள் என்று அம்மா கூறுகிறார். அம்மாவின் குற்றச்சாட்டுகளுடன் உடன்படுகிறோம்.

ரிஷாட் வீட்டில் வேலை செய்வதற்குத் தான் வருவதாகவும், தான் அங்கு வந்ததும் நீ வீட்டுக்கு வந்திடலாமெனவும் அம்மா சிறுமியிடம் கூறியிருக்கிறார். ஆனால் “அம்மா நீங்க வராதீங்க“ என சிறுமி அம்மாவிடம் கூறியிருக்கிறார்.

எவ்வாறாயினும் ஐந்தாம் திகதி, தான் அங்கு வருவதாக அம்மா சிறுமியிடம் கூறியிருக்கிறார். அப்படியிருக்க மூன்றாம் திகதி எவ்வாறு சிறுமி தற்கொலை செய்துகொள்வார்?

ப்ரனிதா வர்ணகுலசூரிய

கேள்வி: சிறுமி இறந்து அவர் புதைக்கப்பட்ட பின்னரே, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்கின்றனர். பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியடைய முடியுமா?

பதில்: சிறுமி உயிரிழந்த பின்னர், சிறுமியின் சொந்த ஊருக்குச் சென்ற இரு பொலிஸ் குழுக்கள், சிறுமியின் பழைய காதலர் யாரென தேடுவதாக கூறுகிறார்கள். உயிரிழந்த சிறுமியின் கன்னித்தன்மையை ஆராய்ந்து, நீங்கள் (பொலிஸார்) என்ன செய்யப்போகிறீர்கள்? இதனால் உயிரிழந்த சிறுமியை கேவலப்படுத்துகிறார்கள். சிறுமியின் அம்மா, சகோதரிகளை கேவலப்படுத்தும் செயலே இது. சிறுமியின் சுயகௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

12 நாள்கள் வைத்தியசாலையில் சிறுமி இருந்தார். சிறுமி வாக்குமூலம் வழங்கும் நிலைமையில் இல்லை என பொலிஸார் கூறுகிறார்கள்.இச்சம்பவம் தொடர்பில் ஏன் எவரும் அந்த 12 நாள்களுக்குள் கைது செய்யப்படவில்லை? சிறுமி தற்கொலை செய்து கொள்ளப் பயன்படுத்தியதாக ரிஷாட் குடும்பத்தார் கூறும், மண்ணெண்னை போத்தலை சிறுமியின் அம்மா பார்த்ததாகக் கூறுகிறார். அதில் அரைவாசி மண்ணெண்ணை இருந்ததாகவும் அந்த அம்மா கூறுகிறார்.

அப்படி என்றால், பொலிஸார் விசாரணைகளுக்காக அந்த மண்ணெண்னை போத்தலை கைப்பற்றியிருக்கவில்லை என்பது தெரியவருகிறது. மற்றொரு பெரிய பிரச்சினை, அரைவாசி மண்ணெண்ணை அந்த போத்தலில் இருந்ததாக அம்மா கூறுகிறார். அரைவாசி மண்ணெண்னை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டால், உடலில் இவ்வளவு தீக்காயங்கள் ஏற்படுமா?

கேள்வி: இச்சம்பவத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வாறு நடந்துக்கொண்டார்கள்? அவர்களது விசாரணைகளில் திருப்தியடைய முடியுமா?

பதில்: இந்த விடயத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் செயற்பாடுகள் வெட்கத்துக்குரியன. இவர்களுக்குக் கிடைக்கும் எந்தவொரு முறைப்பாடுகளையும் முறையாக இவர்கள் விசாரிப்பதில்லை.

இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டஅமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர், 16 வயது நிறைவடைந்ததன் பின்னரே சிறுமி ரிஷாட் வீட்டுக்கு வேலைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, 16 வயதுக்குக் குறைந்த சிறுமியே ரிஷாட் வீட்டில் வேலை செய்துள்ளார் என்கிறார்.

அப்படியானால் அஜித் ரோஹனவை தே.சி.பா. அதிகார சபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் பணிப்பாளர் சவாலுக்கு உட்படுத்துகிறாரா? குற்றவாளிகளை பாதுகாக்க இவர்கள் முயற்சிக்கிறார்களா? பொறுப்பான அதிகாரி ஒருவர், ஊடகங்கள் முன்பாக இவ்வாறு கருத்துகளை கூறுவது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை அவமதிக்கிறார்.

கேள்வி: சிறுமி அந்த வீட்டில் வேலை செய்துவந்ததை ரிஷாட்டுக்கு தெரிந்திருக்காதென சமூகவலைத் தளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றனவே?

பதில்: சிறுமி ரிஷாட் வீட்டுக்கு வரும்போதும், அந்த வீட்டில் உயிரிழக்கும்போதும் ரிஷாட் பதியுதீன் வீட்டில் இருக்கவில்லை என அவரது சட்டத்தரணி கூறுவதாக செய்தியொன்று வெளியாகிருந்தது. இதே செய்தியில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்த ரிஷாட் கடந்த வருடம் டிசெம்பர் 11ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டதாகவும், பின்னர் இந்த வருடம் ஏப்ரல் 21 மாதம் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியாக இருந்தால் கடந்த வருடம் டிசெம்பர் முதல் ஏப்ரல் வரையில் ரிஷாட் வீட்டில் தானே இருந்துள்ளார்.

கேள்வி: சிறுமிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது?

பதில்: பொன்னையா கூறுவதுபோல சிறுமிக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டாருக்கு மொத்தமாக ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சிறுமி வேலைக்கு சென்றுள்ளதாக கூறுகிறார்கள். அப்படியாக இருந்தால் இந்த வருடம் மே மாதம் வரையில் சம்பளம் வழங்கப்பட்டிருக்குமாக இருந்தால், சிறுமிக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தானே வழங்கப்பட்டிருக்க வேண்டும். எதற்காக ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது?

சார் (ரிஷாட்) ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டதன் பின்னர் சம்பளம் வழங்கப்படவில்லை என பொன்னையா சொல்கிறார். அப்படியாக இருந்தால் எதற்காக ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது?

கேள்வி: சிறுமியின் குடும்பத்தார் செய்த தவறுகள் என்ன?

பதில்: வீட்டு வறுமையைக் காரணங்காட்டி சிறுமியை வேலைக்கு அனுப்பியது தவறு. இதுபோன்று பலர் பெருந்தோட்டங்களில் இருந்து வீட்டு வேலைக்கு செல்கிறார்கள். பெருந்தோட்டங்களில் உள்ள பெண்களுக்கு சுயதொழிலைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கொழும்பில் இப்படியும் ஒரு இடம்!! (வீடியோ)