இராக்கில் இம்மாதம் 70 அமெரிக்கப் படையினர் பலி
இராக்கில் பணியில் ஈடுபட்டிருந்த தமது படையைத் சேர்ந்த மேலும் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதையும் சேர்த்து இம்மாதம் இராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டது இம்மாதத்தில்தான். பாக்தாதுக்கு மேற்கே வைக்கப்பட்டிருந்த ஒரு சாலையோர குண்டு வெடித்ததில், 4 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர். தியாலா நகருக்கு வடக்கே நடைபெற்ற சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத் நகரில் நடத்தப்பட்ட இரு வேறு, மறைந்திருந்து தாக்குதல் சம்பவங்களில் இரு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர். பாக்தாத்துக்கு மேற்கேயுள்ள அன்பர் மாகாணத்தில் நடந்த சண்டையில் காயமடைந்த ஒருவர் இன்று இறந்துள்ளார்.
அமெரிக்கா சிரியா மற்றும் இரானின் உதவியை நாட வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் ஆலோசகர்கள் பரிந்துரைக்கக் கூடும் என்று செய்திகள் வரும் வேளையில் அதிக அளவு உயிரிழப்பு குறித்த இந்த செய்தி வந்துள்ளது.
இராக்கில் செயல்பட்டு வரும பல்வேறு குழுக்களுக்கிடையே சமரசம் செய்ய தான் முக்கியமான நிலையில் இருப்பதாக சிரியா கூறுகிறது, ஆனால் இது தொடர்பாக இராக் அரசு தன்னை அணுக புஷ் நிர்வாகம் தடுக்கிறது என்றும் சிரியா கூறியுள்ளது.