சாதனை பெண்களின் காபி தூள் ஓவியம்! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 17 Second

‘‘பெண்கள் சமையல் அறையில் காபி மட்டும் போடக்கூடியவர்கள் இல்லை. எல்லா துறைகளிலும் சாதிக்க கூடியவர்கள். அதனாலேயே சாதனை பெண்கள் 75பேரை காபி தூள் ஓவியமாக வரைந்து, 75வது சுதந்திர தின விழாவில் காட்சிப் பொருளாக வைத்தேன்” என்கிறார் பதினோறாம் வகுப்பு படிக்கும் இளம் ஓவியர் மதனா.

“சொந்த ஊர் திருநெல்வேலி. சிறு வயதிலிருந்தே ஓவியம் மீது ஆர்வம் அதிகம். பள்ளியில் நடக்கும் ஓவிய போட்டியில் பங்கேற்று பரிசுகள் வென்றேன். ஓவியத்தில் சில விஷயங்கள் கற்றுக் கொண்டால் இன்னும் நல்லா வரையலாம் என்று வீட்டில் சொன்னேன். என் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அப்பாவும்-அம்மாவும், ‘சிவராம் கலைக்கூடத்தில்’ கணேசன் மாஸ்டரிடம் சேர்த்து விட்டாங்க. அங்கு ஆறு ஆண்டுகளுக்கு மேல், பென்சில் ஷேடிங், ஃபேப்ரிக் கலர்ஸ், அக்ரலிக் கலர், வாட்டர் கலர், ஆயில் கலர்ஸ் போன்றவைகளில் பயிற்சி பெற்று வருகிறேன்” என்கிற மதனா, ரவிவர்மாவின் ஓவியங்களை அப்படியே வரையும் திறமைப் படைத்தவர்.

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் அன்று சக மாணவிகளுடன் 1000 அடி அளவிலான இசைஞானியின் வெவ்வேறு படங்களை வரைந்த மதனா, பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வரைந்த பாரதியாரின் முழு உருவ ஓவியம் யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. அதேபோல் மாவட்ட அறிவியல் மையமும், இஸ்ரோவும் சேர்ந்து உலக விண்வெளி தினத்திற்கு ‘மீட்டிங் த மூன்’ என்கிற தலைப்பில் வைத்த ஓவிய போட்டியில் முதல் பரிசு வென்ற மதனா, மாவட்ட-மாநில அளவிலான ஓவிய போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார்.

“கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கம் முடிந்து பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில், மாஸ்டரிடம் ஓவியத்திலேயே வேறு ஏதாவது புதிதாக முயற்சிக்கலாமா என்று கேட்டேன். அப்போதுதான் சாதனை பெண்களை பாய் அல்லது முறத்தில் வரையலாம் என்று ஆலோசித்து முயற்சியும் செய்து பார்த்தோம். ஆனால், அதை பாதுகாப்பதும், வரைவதும் கஷ்டமாக இருந்தது. அப்போதுதான் சார்ட் பேப்பரில் காபி தூள் பயன்படுத்தி வரைந்து பார்க்கலாமா? என்று கேட்டேன். ஏனெனில் ஏற்கனவே சம்மர் கேம்பில் காபி தூள் பயன்படுத்தி குள்ளநரியும், அதன் குட்டியையும் வரைந்திருந்தேன்.

கடைசியாக காபி தூளில் வரையலாம் என்று முடிவு செய்த பிறகு என்ன தலைப்பில் வரையலாம் என்று மாஸ்டருடன் பேசிக் கொண்டிருந்த போது, சமையல் அறையிலிருந்து அம்மா, ‘டீ வேணுமா, காபி வேணுமா’னு கேட்டாங்க. அப்போது சட்டென, ‘ஏ மாஸ்டர் பெண்கள் சமையல் அறையில் காபி, டீ மட்டும் தான் போட முடியுமா? எவ்வளவோ இன்று சாதனை செய்து கொண்டிருக்காங்களே! இந்த 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, எல்லா துறைகளிலும் சாதித்த 75 பெண்களின் ஓவியத்தை காபி தூளில் வரையக்கூடாது?” என்று கேட்டேன். மாஸ்டருக்கும், அப்பாக்கும் அது பிடிக்கவே அடுத்த கட்ட வேலையில் இறங்கினோம்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி முதல் ஒலிம்பிக் வீராங்கனை மீரா பாய் வரை வரைந்தேன். இதற்காக நான் எடுத்துக் கொண்ட காலம் எட்டு மாதங்கள். பொதுவாக மனிதர்களின் முகங்களை வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம், அதே வேலையில் சவாலானதும் கூட. ஏனெனில் மற்ற ஓவியங்கள் வரையும் போது அது இப்படித்தான் இருக்கும் என்கிற வரையறை இருக்காது. நம் கற்பனையில் வரையலாம். ஆனால், மனித முகங்கள் அப்படியில்லை. நாம் பார்ப்பதை வரைய வேண்டும்” என்கிற மதனா, இதற்கு முன்பே நான்கு முறை ஓவிய கண்காட்சியில் தனது ஓவிய படைப்புகளை வைத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒலிம்பிக்கில் ஒளிர்ந்த பதக்க பதுமைகள்! (மகளிர் பக்கம்)
Next post கொண்டைக்கடலையின் மருத்துவப் பயன்கள்!!! (மருத்துவம்)