அப்சல் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றம் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் அப்சலுக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அக்டோபர் 20ம் தேதி (இன்று) அப்சலை தூக்கிலிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்சலுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரி அவரது மனைவி குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த மனு தொடர்பாக அப்துல் கலாம் இதுவரை முடிவு எதையும் அறிவிக்கவில்லை.
இதனால் திட்டமிட்டபடி அப்சல் தூக்கிலிடப்படுவாரா என்பதில் சந்தேகம் எழுந்தது. இந் நிலையில் இன்று காலை திட்டமிட்டபடி அப்சல் தூக்கிலிடப்படவில்லை. குடியரசுத் தலைவர் முடிவு அறியப்படும் வரை அப்சல் தூக்கிலிடப்பட மாட்டார் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் தூக்கு கைதிக்கு கலாம் கருணை:
இதற்கிடையே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கருணை காட்டி ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார். தற்போது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் உள்ளிட்ட 20 பேரின் கருணை மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
இந் நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த 60 வயது தூக்குத் தண்டனைக் கைதிக்கு கருணை காட்டி அவரது தண்டனையை ஆயுறள் தண்டனையாக கலாம் மாற்றியுள்ளார். கலாமால் கருணை காட்டப்பட்ட அந்தக் கைதியின் பெயர் கீரா ராஜ்குமார். இவர் 1992ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி தனது மனைவி, 2 குழந்தைகள் மற்றும் மைத்துனரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. ஆனால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது. இதை எதிர்த்து அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து ராஜ்குமார் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த குடியரசுத் தலைவர் கலாம், ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.