கொரோனா மருந்துகளால் கல்லீரல் அழற்சி !! (மருத்துவம்)
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளால் கல்லீரல் கொழுப்பு மற்றும் கல்லீரல் அழற்சி நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நமது மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலானவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு பற்றி தெரிவதில்லை.
குறிப்பாக இந்த கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு அவர்கள் சிறிது மது குடிப்பவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து அது வீக்கத்தையும் கல்லீரலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில் கோவிட் – 19 தொற்று ஏற்படுத்தும் தாக்கம் கல்லீரலை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் உள்ளிட்ட மிதமானது முதல் கடுமையான ஸ்டீராய்டு மாத்திரைகள் கல்லீரல் அழற்சி நோய் ஏற்பட வழிவகை செய்யலாம் என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸின் நச்சுத்தன்மையானது கல்லீரலை பாதிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சில உயிரணுக்களால் சுரக்கப்படும் சைட்டோகைன் ஸ்டார்ம் என்னும் நோய் எதிர்ப்பு எதிர்வினையானது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு பிற உயிரணுக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்படும்போது, அவர்கள் எந்தவிதமான உடல் உழைப்புமின்றி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு, கல்லீரல் கொழுப்பு பிரச்னை, நீரிழிவு உள்ளிட்ட பிற வளர்சிதை மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றானது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
Average Rating