ஐக்கிய தேசியக்கட்சியின் குற்றச்சாட்டுக்கு ஜே.வி.பி விளக்கம்
இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் ஏற்பாட்டாளராக நோர்வே செயற்படும்வரை ஜே.வி.பி எந்தவொரு விடயத்தையும் நோர்வேயுடன் பகிர்ந்துகொள்ளாது. இந்நிலையில் நோர்வேயூடாக ஜே.வி.பி புலிகளுக்கு இரகசிய செய்தியொன்றை அனுப்பியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்துவதில் எந்தவொரு உண்மையும் இல்லையென்று ஜே.வி.பியின் பிரச்சார செயலர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமூலம் தீர்வுகாண ஜே.வி.பி ஒருபோதும் இணங்கியதில்லை. இணங்கப்போவதுமில்லை. என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சமஷ்டி முறையை கடுமையாக எதிர்த்து வந்த ஜே.வி.பி அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பாக புலிகளுடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஜே.வி.பியின் இம்முயற்சிக்கு அரச சமாதான செயலக பிரதானி பாலித கொஹேன துணைபோயிருப்பதாகவும் ஐ.தே.கட்சியின் பிரதிப் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க ஏற்கனவே தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.