முதுகுத்தண்டு பக்கவளைவு!! (மருத்துவம்)
முதுகுத்தண்டில் வளைவு என்பது குழந்தைகளிடம் எந்தவொரு வயதிலும் அவர்களது முதுகுத்தண்டில் உருவாகக்கூடிய ஒரு வளைவு நிலையாகும். ஸ்கோலியோசிஸ் (Scoliosis) எனப்படும் இந்த பிரச்னைக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நுரையீரல் நோய், நடப்பதில் சிரமம் மற்றும் உடல் செயல்பாடுகளின்போது கடுமையான முதுகுவலி போன்ற சிக்கல்களுக்கு இப்பாதிப்பு நிலை வழிவகுக்கக்கூடும்.
இந்தியாவில் முதுகுத்தண்டில் காணப்படும் இந்த உருக்குலைவின் காரணமாக 5 மில்லியன் குழந்தைகள் சிரமப்படுகின்றனர் மற்றும் இவர்களுள் 60%-க்கும் அதிகமானவர்கள், இதற்கு சிகிச்சைப் பெறாமலேயே விட்டுவிடுகின்றனர்.இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமையும் மற்றும் இக்குழந்தைகளின் குடும்பத்தில் வறிய சமூக பொருளாதார நிலையுமே இதற்கு காரணமாக இருக்கின்றன.
ஒரு குழந்தைக்கு 3 ஆண்டுகள் என்ற மிக சிறிய வயதிலேயே முதுகுத்தண்டு பாதிப்பு நிலை இருக்கிறதா என அடையாளம் காண முடியும். ஏற்றஇறக்கமுள்ள தோள்பட்டைகள் (இரு தோள்பட்டைகளின் உயரத்தில் வித்தியாசம்) ஒரு பக்கமாக உடல் சாய்ந்திருக்கும் நிலை, ஒருபக்கத்தில் இடுப்பிற்கும், கைக்குமிடையே பெரிய இடைவெளி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் முன்புறமாக சாயும்போது முதுகுப்பக்கத்தில் கூன் ஆகிய நிலைகளின் மூலம் இப்பாதிப்பு இருக்கிறதா என்பதை வைத்து கண்டறியலாம். மிக ஆரம்ப நிலையிலேயே இப்பாதிப்பு நிலை கண்டறியப்படுமானால், அறுவைசிகிச்சையின் துல்லியமும், வெற்றியும் மிக அதிகமாக இருக்கும்.
மேலும், குழந்தை வளர்ச்சியடையவும் மற்றும் பிற குழந்தைகள் போல இயல்பான வாழ்க்கையை நடத்தவும் அறுவைசிகிச்சை உதவுகிறது. சிறுவர்களோடு ஒப்பிடுகையில், அதிக எண்ணிக்கையில் இளவயது சிறுமிகளே இந்நிலையால் பாதிக்கப்படுகின்றனர். நம்நாட்டின் பல பகுதிகளில், ஸ்கோலியோசிஸ் கூன் முதுகு என்பது, ஏழை மனிதனின் நோய் என்று கருதப்படுகிறது.
இதற்கான சிகிச்சைகளுக்கு அதிக பணம் செலவாகும் என்ற காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர், முதுகுத்தண்டு சிறப்பு மருத்துவர்களை சிகிச்சைக்காக அணுகுவதில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதி படைத்தவர்கள் உதவி செய்யவும் முன் வர வேண்டும்.
Average Rating