அமெரிக்க ராக்கெட்டில் மீண்டும் ஒரு இந்திய பெண் விண்வெளிக்கு பயணம்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் `நாசா’ விண்வெளிக்கு அவ்வப்போது ராக்கெட்டுகளை அனுப்பி வருகிறது. விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச மிதக்கும் ஆய்வுக் கூடத்துக்கு இந்த ராக்கெட்டில் தளவாடங்களையும் விண்வெளி வீரர்களையும் அனுப்பி வைக்கிறது. கடந்த 2003-ம் ஆண்டு இந்த ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிய கொலம்பியா ராக்கெட் விண்வெளியில் வெடித்து சிதறியது. இதில் இந்திய வீராங்கனை கல்பனா சாவ்லா உள்பட 7 நிபுணர்கள் பலியானார்கள்.
விண்வெளிக்கு இப்போது மேலும் ஒரு இந்திய பெண்ணை நாசா நிறுவனம் அனுப்பி வைக்கிறது. இந்திய வம்சா வழியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க கடற்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றி வருகிறார். இவரை நாசா நிறுவனத்தில் என்ஜினீயராக சேர்த்துக் கொண்டுள்ளது. அவருக்கு விண்வெளியில் செல்ல `நாசா’ பயிற்சி அளிக் கிறது. வருகிற டிசம்பர் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்துக்கு அமெரிக்கா அனுப்பும் ராக்கெட்டில் சுனிதா வில்லியம்சும் செல்கிறார்.
கல்பனா சாவ்லாவுக்குப் பிறகு விண்வெளிக்கு செல்லும் 2-வது இந்திய அமெரிக்க வீராங்கனை சுனிதாதான். மிதக்கும் ஆய்வுக்கூடத்தில் இவர் பல நாட்கள் தங்கி இருந்து ஆய்வுகளையும் மேற்கொள்வார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அட்லாண்டிஸ் ராக்கெட் இந்த ஆய்வுக்கூடத்துக்கு வருவது வரை சுனிதா மிதக்கும் ஆய்வுக் கூடத்திலேயே தங்கி இருப்பார்.