திருமணத்துக்கு முன் இருவரை காதலித்த பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப்
திருமணத்துக்கு முன் இரு பெண்களை பாகிஸ்தான் அதிபர் முஷாரப் காதலித்துள்ளார். இத்தகவலை முஷாரப் தாம் எழுதிய “இன் தி லைன் ஆப் ஃபையர்’ புத்தகத்தின் உருது பதிப்பில் (“சப்úஸ பெஹலே பாகிஸ்தான்’) தெரிவித்துள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் அதிபர் முஷாரப், அவரது மனைவி செஹ்பா, தாயார் ஜரீன் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இது குறித்து பின்னர் அதிபர் முஷாரப் கூறியது: நான் எழுதிய புத்தகத்தின் உருது பதிப்பை என் தாயாருக்கு அர்ப்பணிக்கிறேன். நான் புத்தகம் எழுதுவேன் என்று எனது தாயார் கனவில்கூட நினைக்கவில்லை.
என் மனைவி, செஹ்பாவும், மகன் பிலால் மற்றும் மகள் ஆலியாவும்தான் என்னை புத்தகம் எழுதத் தூண்டியவர்கள். நான் பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டிருந்த போதும் புத்தகம் எழுத என்னை ஊக்கப்படுத்தியவர்கள் அவர்கள்தான்.
நான், 15-வயது இளைஞனாக இருந்தபோது ஒரு பெண்ணை காதலித்தேன். அதன் பின் கராச்சியில் இருந்த வங்காளப் பெண்ணை காதலித்தேன். அவர் இப்போது திருமணமாகி, மகிழ்ச்சியுடன் வங்கதேசத்தில் குடும்பம் நடத்தி வருகிறார். (முதல் காதலி யார் என்பதை அவர் விவரிக்கவில்லை.)
இந்த புத்தகம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நான் வெளிப்படையாக பதில் கூறியுள்ளேன். ஆனால் திருமணத்துக்கு முன் நான் இருவரை காதலித்தது குறித்து எனது மனைவி என்ன சொன்னார் என்று கேட்கிறீர்கள். மிகவும் தர்மசங்கடமான இந்த கேள்விக்கு பதில் சொல்வதைத் தவிர்க்க விரும்புகிறேன்.
நான், பணம் சம்பாதிக்கவும், என்னைப் பற்றி பெருமைப்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளதாக சிலர் விமர்சித்துள்ளனர். அது முற்றிலும் தவறு. புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் தொகை அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டு, கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்புக்கு உதவ அளிக்கப்படும் என்றார் முஷாரப்.