கூடையில் பூக்கள்…சூப்பர் பிசினஸ்!(மகளிர் பக்கம்)
பூக்களை கட்டி தினமும் வீடு வீடாக கொடுத்து செல்வது என்பது இன்றும் வழக்கமாக உள்ளது. அதே பூக்கள்தான். ஆனால் அதையே அழகாக மூங்கில் கூடையில் அலங்கரித்து ஒரு தொழிலதிபராக உருவெடுத்துள்ளார் மும்பையை சேர்ந்த கிரிஸ்டின் லாங்ஸ்டே. இவர் ‘ப்ளூம்பாம்ஸ்’ என்ற பெயரில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் வீடுகளை அலங்கரிக்கவும், திருமணம் மற்றும் பார்ட்டி போன்ற விசேஷங்களுக்கு பூக்கள் கொண்டு அலங்கரித்து வருகிறார். சட்ட ஆலோசகராக இருந்தவர், பூக்கள் மேல் காதலால் லண்டனில் பூக்கள் அலங்கரிக்கும் பள்ளியில் ‘ஃபிளவர் ஆர்டிஸ்டரி’ பயிற்சி எடுத்துள்ளார்.
‘‘நான் பிறந்தது வளர்ந்தது ஷில்லாங்கில். அங்கு எங்கு திரும்பினாலும் பூந்தோட்டங்கள் இருக்கும். பார்க்கவே அவ்வளவு ரம்மியமா இருக்கும். அப்படிப்பட்ட ஊரில் வளர்ந்த நான் பரபரப்பான மும்பைக்கு வந்த போது கொஞ்சம் தடுமாறி தான் போனேன். பூக்களுக்கு தனிப்பட்ட சக்தியுண்டு. மனதை மட்டுமில்லை, நாம் வசிக்கும் இடத்தையும் சந்தோஷமாக மாற்றியமைக்கும். நான் படிச்சிட்டு இந்தியா வந்த போது, பூக்கள் இல்லாமல் விசேஷங்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்.
ஆனால் அதற்கு பயன்படுத்தப்படும் பூக்கள் எல்லாம் அதிகபட்சம் ஒரு நாட்கள் தான் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். மறுநாள் வாடிவிடும். என்னைப் பொறுத்தவரை நான் கொடுக்கும் பூக்கள் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கணும். அதனால் நாகாலாண்ட் மற்றும் மகாராஷ்டிரா போன்ற இடங்களில் உள்ள பூந்தோட்டத்திற்கு பயணம் செய்து அங்குள்ள உயர்ரக பூக்களை பற்றி தெரிந்து கொண்டேன். இந்தியாவைப் பொறுத்தவரை இங்குள்ள மக்கள் பூக்களுக்காக அதிக செலவு செய்ய விரும்புவதில்லை.
இந்தியாவில் விளைவிக்கப்படும் தரமான பூக்கள் எல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைவிட நான் சந்தித்த பெரிய சாலஞ்ச், அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் முதல் ரகப் பூக்களை எனக்கு சப்ளை தரச் சொல்லி பூ வியாபாரிகளை சம்மதிக்க வைத்தது தான். அதன் பிறகு எனக்கான வாடிக்கையாளர் வட்டம் தானாக உருவானது’’ என்றார் கிரிஸ்டின்.