முதுகுவலிக்கு அஞ்சேல்!(மருத்துவம்)

Read Time:7 Minute, 1 Second

இன்று, முதுகுவலி என்பது ஒரு வாழ்வியல் நோயாகிவிட்டது. முப்பதைக் கடந்த பலரும் முதுகுவலியால் அவதிப்படுக்கிறார்கள். இதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. 60 சதவீத மக்கள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையில் முதுகு வலியால் அவதிப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது தற்போது வளர்ந்து வரும் பெரிய சுகாதார பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. காயம் அல்லது அதிர்ச்சி, உடல் பருமன், அசாதாரண முறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது, நீண்ட நேர பயணம், மன அழுத்தம், வேலையில் அதிருப்தி அல்லது கடுமையான உடற்பயிற்சி மற்றும் சமூக பொருளாதார நிலை ஆகிய காரணங்களால் முதுகுவலி ஏற்படுகிறது.

முதுகுவலி என்பது ஒரு நோய் அல்ல. ஆனால், அது உடலில் ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பாகும்.வட்டு இறக்கம், நரம்பு வேர் சுருக்கம், முதுகெலும்பு உறுதியற்ற தன்மை, முதுகெலும்பு முறிவு, எலும்புச் சிதைவு,கீல்வாதம், அரிதான தொற்றுகள் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றின் காரணமாக முதுகின் கீழ்ப் பகுதியில் வலி ஏற்படுகிறது. சிலருக்கு கடுமையான முதுகுவலி இருக்கும். சிலருக்கு வெறும் காலுடன் நடக்கும்போது சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருப்பவர்களுக்கும் முதுகுவலி ஏற்படும்.

முதுகுவலி ஏற்பட்டுவிட்டாலே அறுவைசிகிச்சைதான் தீர்வு என்று சிலர் கருதுகிறார்கள். மேலே சொன்ன முதுகுவலிகளுக்கெல்லாம் அறுவைசிகிச்சை தேவையில்லை. முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, சரியான வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றோடு முதுகுத் தண்டை வலுப்படுத்துவதற்காக இரண்டு மாதங்கள் பிசியோதெரபி எடுத்துக்கொண்டு சில வாரங்கள் ஓய்வில் இருந்தாலே முதுகுவலி பறந்துவிடும்.

இரண்டு வார காலத்துக்கு இந்த சிகிச்சையை மேற்கொண்டு தொடர்ச்சியான வலி குறைந்த பிறகு, முதுகுவலியின் காரணத்தைக் கண்டறிய முழுமையான மருத்துவ நரம்பியல் பரிசோதனை செய்யலாம். முதுகெலும்பின் நிலை, மூட்டுகளின் கீல்வாதத்தை மதிப்பீடு செய்ய முன்னோக்கி வளைத்தல் மற்றும் பின்னோக்கி வளைத்தல், எலும்பின் தரம், எலும்பு முறிவு, ஏதேனும் கட்டிகள் இருந்தால் அவற்றை கண்டறிய எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் பொறுத்தவரை எக்ஸ்ரே எடுப்பதற்கான கட்டணம் என்பது மிகவும் குறைவாகும். எக்ஸ்ரேயில் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே வட்டு, நரம்பு மற்றும் மென்மையான திசுக்களை மதிப்பீடு செய்ய எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யலாம். வலி ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய எம்ஆர்ஐ ஸ்கேன் நமக்கு உதவுகிறது.சிலருக்கு, அடிவயிற்றுத் தசைகள், முதுகுத் தசைகள் மற்றும் கால்களின் தசைகளில் வலிமை இல்லாத காரணத்தாலும் முதுகு வலி ஏற்படுகிறது. எனவே, வலி மேலும் அதிகரிக்காமல் தடுக்கவேண்டுமானால், காயமடைந்த உடல் பாகங்களையும் தசைகளையும் வலுப்படுத்தி குணமாக்க வேண்டும்.

மேற்கத்திய நாடுகளில் முதுகு வலிக்கு உடற்பயிற்சி மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. உடற்பயிற்சியானது ஒரு சிகிச்சையாக இல்லாமல் ஒரு வாழ்க்கை முறை என்று மாறினால் முதுகுவலியைக் கட்டுப்படுத்தலாம். வழக்கமான நடைப்பயிற்சி, முறையான சிகிச்சைகள் மற்றும் மருத்துவரிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்வது அவசியம். அனைத்துவிதமான முதுகு வலிகளும் உடற் பயிற்சிகள் மூலம் 90 சதவீதம் தீர்க்கப்படுகின்றன. இதற்கு அறுவைசிகிச்சை தேவை இல்லை என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆறு வாரங்களுக்கு வலி நிவாரண மருந்துகள் மற்றும் முதுகை வலிமைப்படுத்தும் பயிற்சிகள் எடுத்த பிறகும் ஒருவருக்குத் தொடர்ந்து வலி இருந்தால், முறையான மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு டிரான்ஸ்ஃபார்மினல் எபிடூரல் ஸ்டீராய்டு ஊசி எடுத்துக்கொள்ளலாம்.இது, வலியைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். நரம்பு வேர் சுருக்கத்தை ஏற்படுத்தும் வட்டு வீக்கம் அல்லது பொதுவான வட்டு வீக்கம் ஏற்பட்டாலும் இந்த ஊசி மூலம் அதைக் குணப்படுத்த முடியும். ஆனால் தொடர்ந்து நோயாளிக்கு வலி இருந்தால் முதுகெலும்பு அறுவைசிகிச்சைப் பரிந்
துரைக்கப்படுகிறது.

முதுகெலும்பு உறுதியற்ற தன்மை, கட்டி, பலவீனமான கால்கள், மலக்குடல் பிரச்னை, சிறுநீர் மற்றும் மலம் அடங்காமை, ஆசனவாய் பகுதியில் உணர்திறன் குறைதல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கும், முதுகெலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது.எனவே, முதுகு வலி உள்ளவர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை. அவர்களுக்கு வலி நிவாரணிகளும் உடற்பயிற்சியுமே போதுமானதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இணையத்தை கலக்கும் பாடகி பிரனிதி!! (மகளிர் பக்கம்)
Next post இயர் போன் அலெர்ட்! (மருத்துவம்)