கருமுட்டை தானம்… சில சந்தேகங்கள்!(மருத்துவம்)

Read Time:4 Minute, 55 Second

குழந்தையில்லாத பெண்களுக்கு கருமுட்டை தானம் என்பது மிகப் பெரிய வரப்பிரசாதம். யாரோ பெற்று ஆதரவற்று விடப்பட்ட குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிற பெரிய மனது குழந்தையில்லாத எல்லா தம்பதியருக்கும் வருவதில்லை. ஏதோ ஒரு வகையில் குழந்தை தன்னுடைய ரத்தம் என சொல்லிக் கொள்வதையே விரும்புகிறார்கள்.
அவர்களுக்கு கருமுட்டை தானம் சரியான சாய்ஸ்.

கருமுட்டை தானம் எப்படி செய்யப்படுகிறது… யாரிடமிருந்து முட்டைகளைப் பெறலாம்? கொடுப்பவருக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா? எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

‘‘தத்தெடுப்பதைவிடவும் கருமுட்டை தானம் மூலமாக குழந்தை பெறுகிற பெண்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. கருமுட்டை தானம் மூலம் விரைவில் குழந்தை பெறவும் முடிகிறது. இதில் யாருடைய கருமுட்டை யாருக்கு வைக்கப்படுகிறது என்பதைக் கட்டாயம் சொல்வார்கள். இவர்களுடைய குணங்கள் பிடித்திருக்கிறது… அவரிடமிருந்து பெறுகிற முட்டையை வைத்தால் நன்றாக இருக்கும் என தானம் பெறுவோர் விரும்பினால், அந்த நபரை அவர்கள் அறிந்திருந்தால் அவரிடமிருந்தும் கருமுட்டையை சேகரிக்கலாம். கொடுப்பதா வேண்டாமா என்பது தானம் தருபவரின் சுதந்திரம். தகுதியுள்ள பெண்ணின் கருமுட்டைகள்தான் தானமாகப் பெறப்படும். குழந்தை வேண்டும் என நினைக்கிற பெண்கள் உடன்பிறந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள், தோழிகள் என யாரிடமும் கருமுட்டைகளைத் தானமாகப் பெறலாம்.

வயது முதிர்ந்த பெண்ணிடமிருந்து பெறப்படும் கருமுட்டையை ஏற்றுக் கொள்வதில்லை. கருத்தரிக்கும் வாய்ப்பும் கரு நிலைத்திருக்கும் வாய்ப்பும் குறைவாக இருக்கும் என்பதே காரணம். பாரம்பரிய குறைபாடுள்ள குடும்பத்தில் பிறந்தவர்
களது கருமுட்டைகளையும் தானமாகப் பெற முடியாது. மருத்துவ ரீதியான பக்கவிளைவுகள், மரபணு குறைபாடுகள் மற்றும் நோய்கள் உள்ளவர்களிடமிருந்தும் கருமுட்டையை தானமாகப் பெற முடியாது.கருமுட்டை தானம் கொடுக்கும் பெண் 25 முதல் 30 வயதுக்குள்ளும் ஆரோக்கியமானவராகவும் இருக்க வேண்டும்.

கருமுட்டை ஸ்கேன் வழியே சேகரிக்கப்படும். கருமுட்டை உண்டாவதற்காக அந்தப் பெண்ணுக்கு 10 நாட்களுக்கு ஹார்மோன் மாத்திரை அல்லது ஊசி கொடுக்கப்படும். இதனால் எந்த பாதிப்புகளும் இருக்காது.தானம் கொடுப்பதற்கு முன் அந்தப் பெண்ணுக்கு ரத்தப் பரிசோதனையும் ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படும். தானம் கொடுத்ததும் 2 மணி நேரத்தில் சகஜமாக வீட்டுக்குத் திரும்பலாம். கருமுட்டை தானம் கொடுக்கும் பெண்ணுக்கும் பெறுகிற பெண்ணுக்கும் சில பொருத்தங்கள் பார்ப்பார்கள். தானம் கொடுப்பவர் அதற்கான படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்.

கருமுட்டை பெறப்படும் சூழலில் ஹெபடைட்டிஸ் கிருமிகள் இருக்கின்றனவா, ஹெச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதெல்லாம் சோதிக்கப்படும். இதற்கான கட்டணங்களை கருமுட்டை தானம் தருகிறவர் கொடுக்க வேண்டாம். பெறுகிறவரே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்… கருமுட்டை தானம் தந்தவர் சட்டரீதியாக குழந்தைக்கு உரிமை கொண்டாட முடியாது.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பொங்கல் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post உங்கள் கர்ப்பப்பையின் அளவு என்ன?(மருத்துவம்)