குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்…!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 38 Second

சாலைகளில் மட்டும் விபத்துகள் நடைபெறுவது இல்லை. வீடுகளிலும் விபத்துகள் நடைபெறுகின்றன. கவனக்குறைவு, மறதி இவற்றுக்கு முக்கிய காரணங்கள் ஆகிறது. வீடுகளில் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சுட்டிக்குழந்தைகள் வீடுகளில் விபத்துகளுக்கான வாசல்களை திறந்து வைக்கின்றன. சமையல் அறை முதல் மொட்டைமாடி வரை குழந்தைகளுக்கு விபத்தை தேடித்தரும் இடங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு இடத்தையும் பாதுகாப்பாக வைப்பதுடன், குழந்தைகள் வீடுகளில் விபத்துகளில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளையும் காணலாம்.

விபத்துகளுக்கு அதிகம் வாய்ப்புள்ள இடம் சமையல் அறை. தாய்மார்கள் அதிக நேரம் செலவிடுகின்ற பகுதியும் இதுதான். தினம் தினம் பயன்படுத்துகின்ற பொருட்களை கவனமாக கையாளவில்லை எனில் விபத்து உறுதி. குழந்தைகளை ஒரு போதும் சமையல் அறைகளில் அமர்ந்து விளையாட அனுமதிக்க கூடாது. எத்தனை கவனமாக இருந்தாலும் விபத்துக்கான வாய்ப்புகள் காத்திருக்கும் இடம் இது ஆகும். விறகு அடுப்பு என்றாலும், காஸ் அடுப்பு என்றாலும் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டும். தரைப்பகுதியில் அடுப்புகள் வைத்திருப்பது பெரும் ஆபத்தை தரும். குழந்தைகள் நேரடியாக ஓடிவந்து அடுப்பின் மீது விழவும், தாயார் சமையல் செய்து கொண்டிருக்கும் வேளையில் பின்னால் வந்து அவர்கள் மீது மோதினாலும் ஆபத்துக்கு வாய்ப்பு உண்டு.

குழந்தைகளை கையில் தூக்கி வைத்துக்கொண்டு சமையல் செய்வது மிகவும் எளிதானது என்று சிலர் கூறினாலும் அதுவும் மிக ஆபத்தானதுதான். தாளிக்கும்போது எண்ணெய் முகத்தில் தெறிக்கவோ, பிரஷர் குக்கரில் இருந்து அதிக வெப்பத்துடன் கூடிய காற்று முகத்தில் வீசவோ வாய்ப்பு உண்டு. குழந்தைகளை பார்த்துக்கொள்வது முதல் வீட்டு வேலைகள் என ஒட்டுமொத்த பணியையும் தாய்மார்கள் செய்யும்போது அவர்களுக்கு மறதி வராமல் இருப்பது இல்லை. விபத்துகள் ஏற்பட்ட பின்னர் கணவன் மனைவியோ, குடும்ப உறுப்பினர்களோ ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்வதை விட பணிகளை ஒருங்கிணைந்து செய்வது பயனை தரும். அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்துவிட்டு வேறு பணிகளை செய்ய சென்றால் பால் பொங்கி காஸ் ஸ்டவ் அணைந்துவிடும். ஆனால் காஸ் ஆப் செய்யப்படாமல் இருப்பதால் மீண்டும் வந்து லைட்டர் கொண்டு பற்றவைக்கும்போது காஸ் பரவியிருப்பதால் எளிதில் தீ பிடித்து வெடிக்க கூட வாய்ப்பு உண்டு.

கத்திரி, ஸ்க்ரூ டிரைவர், கத்தி உள்ளிட்ட கூர்மையான பொருட்கள் குழந்தைகள் வசம் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை கையில் பிடித்துக்கொண்டு ஓடுகின்ற குழந்தைகள் தடுக்கி விழுந்தாலும் ஆபத்துதான். ஓடி, நடந்து விளையாடுகின்ற குழந்தைகள் உள்ள வீடுகளில் கூர்மையான பொருட்கள், மரசாமான்கள் போன்றவை குழந்தைகள் மோதும் வகையில் வைத்திருக்க கூடாது. வீட்டிலும், சுற்றுப்புறங்களிலும், பாத்ரூமிலும் பெரிய பாத்திரங்கள், பக்கெட்களில் தண்ணீரை சேமித்து வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தண்ணீருக்குள் கைபோட்டு விளையாடுகின்ற குழந்தைகள் மறு கையின் பேலன்ஸ் தவறும்போது அல்லது கால் வழுக்கி தலைகவிழ்ந்து தண்ணீர் பக்கெட்டில் விழுந்து ஆபத்தை தானாக தேடிக்கொள்ளும்.

குழந்தைகளை கிணற்றின் கரைகள், தண்ணீர் தொட்டிகள் அருகே விளையாட விட கூடாது. தண்ணீருக்குள் தவறி விழுந்தால் தலைகீழாக தூக்கிப்பிடித்து குடித்த தண்ணீரை வாந்தி யெடுக்க செய்ய வேண்டும். சுவாசம் குறைந்துவிட்டது என்று தோன்றினால் செயற்கை சுவாசம் அளித்து உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகள் பள்ளி பருவத்தை நெருங்கும்போது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் சாலை பாதுகாப்பு விதிகளை பற்றியதுதான்.

சாலையை கடக்கும்போது ஸீப்ரா லைனில்தான் நடந்து செல்ல வேண்டும், அவ்வாறு செல்லும்போது சாலையின் இரு பக்கமும் வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து வேகமாக கடக்க வேண்டும் என்பது உட்பட என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். சாலையில் நடக்கும்போது வலதுபக்கமாக நடக்க வேண்டும் என்பதும், பெற்றோர் குழந்தைகளை தங்களது வலது பாகத்தில் நடத்தி செல்ல வேண்டும் என்பதும் முக்கியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அழும் குழந்தையை சமாளிக்கும் முறை!! (மருத்துவம்)
Next post திருமண நகைகளை வடிவமைக்கும் தாய்-மகள் ஜோடி! (மகளிர் பக்கம்)