மேக்கப் பாக்ஸ் – காம்பேக்ட் பவுடர்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 35 Second

நம் அம்மாக்கள், பாட்டிகளின் ஹேண்ட்பேக்குகளில் கூட இப்போது பளிச்சென தெரிகின்றன காம்பேக்ட் பவுடர். அந்த அளவுக்கு காம்பேக்ட் பவுடர் பயன்பாடு மேக்கப் உலகில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. உடனடி பளிச் முகத்தோற்றம் கொடுக்க ஒரு காலத்தில் டால்கம் பவுடர் பயன்படுத்தி வந்த பெண்கள் வேலைக்குச் செல்லத் துவங்கிய போது அவர்களின் ஆஸ்தான ஹேண்ட்பேக் தோழியாக மாறிப்போனது காம்பேக்ட் பவுடர். எத்தனையோ வருடங்களாக பயன்படுத்தினாலும் இன்னமும் நாம் பயன்படுத்தும் முறைகளிலும், காம்பேக்ட் பவுடர் தேர்வு செய்வதிலும் கூட நிறைய சந்தேகங்கள் உள்ளன. அதனைப் பற்றி விளக்குகிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் சிவ ஷீமா.

‘‘ஹேண்ட்பேக் தோழி! இது காம்பேக்ட் பவுடருக்கான மிகச்சரியான வர்ணனை. டால்கம் பவுடர் எவ்வளவு சின்னதாக வாங்கினாலும் அதன் உருளை அல்லது நீண்ட வடிவம் ஹேண்ட்பேக்குகளில் பொருத்தமாக இருக்காது. டால்கம் பவுடரை ஓரம் கட்டியதற்கான முதல் காரணம் தட்டையான, ஒல்லியான காம்பேக்ட் பவுடர்களின் டப்பாக்கள்தான். டால்கம் பவுடர்கள் அதிகமான வெயில், வியர்வை வேளைகளில் பயன்படுத்தினால் வெள்ளை வெள்ளையான திட்டுகளாக நம்மை கிட்டத்தட்ட ‘பவுடர் டப்பா’ என கிண்டலடிக்கவே வைத்துவிடும் என்பதும் மற்றுமொரு காரணம்.

காம்பேக்ட் பவுடர்களின் முக்கிய வேலை என்ன?

உடனடி பளிச் முகம், புத்துணர்வு, சரும பொலிவு என பல அம்சங்களை இந்த காம்பேக்ட் பவுடர்கள் கொண்டுள்ளன. வியர்வை, எண்ணைப்பசை, பருக்கள், பொலிவற்ற சருமம் என அனைத்திற்கும் இன்ஸ்டன்ட் தீர்வாக இருக்கிறது காம்பேக்ட் பவுடர்.

தேர்வு செய்வது எப்படி?

காம்பேக்ட் பவுடர்களில் இரண்டு வகைகள்தான் உள்ளன. தளர்வான பவுடர் மற்றும் பிரெஸ்ட் பவுடர் (Loose & pressed). லூஸ் பவுடர் பெரும்பாலும் ஃபவுண்டேஷனுடன்தான் போட்டுக்கொள்ள வேண்டும். பிரெஸ்ட் பவுடர் நேரடியாக மேக்கப் வேண்டாம் என்கிற நபர்கள் பயன்படுத்தலாம். முதலில் நம் சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப காம்பேக்ட் பவுடர்கள் தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக பவுடர் என்றாலே எண்ணைப் பசை சருமத்திற்கானது என கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். எனினும் பொலிவான சருமம், பளிச் நிறம் யாருக்குதான் பிடிக்காது. இதனால்தான் மார்க்கெட்டில் ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ப காம்பேக்ட் பவுடர்கள் உள்ளன.

வறண்ட சருமம் எனில் காம்பேக்ட் பவுடரே அவசியம் இல்லை. அவர்கள் இதனை பயன்படுத்த விரும்பினால், மாய்ச்சரைஸர், சன் ஸ்கிரீன் லோஷன் அப்ளை செய்த பிறகு பிரெஸ்ட் காம்பேக்ட் பவுடர் பயன்படுத்தலாம். எண்ணைப் பசை சருமம் என்றால், லூஸ் காம்பேக்ட் பவுடர். பருக்கள் நிறைந்த சருமம் எனில் போர்லெஸ் எனப்படும் சரும துவாரங்கள் மேல் வேலை செய்யாத ஆர்கானிக் பவுடர்கள் பயன்படுத்தலாம்.

இவை பருக்களை மறைப்பதுடன் சரும துவாரங்களிலும் பவுடர் துகள்கள் இறங்கி மேற்கொண்டு பிரச்னை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். அடுத்து மிகவும் முக்கியமானது  நம் சரும நிறம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப காம்பேக்ட் பவுடர் நிறம் தேர்வு செய்வது. இதில் நல்ல டஸ்கி எனப்படும் அடர் நிற ஸ்கின் கொண்டவர்கள் பனானா பவுடர் பயன்படுத்தலாம். அவர்களின் சாக்லேட் நிறத்தை மேலும் பொலிவாக, பளிச்சென காட்டும். பொதுவாகவே இந்த பனானா பவுடர்கள் எல்லா சருமத்திற்கும் ஏற்றது.

பயன்படுத்தும் முறை

‘எந்த மேக்கப்பாக இருந்தாலும் CTM (Cleansing, Toning & Moisturizer) அவசியம். அதாவது முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து, தேவைப்பட்டால் டோனர் பயன்படுத்தலாம். அதன் பிறகு மாய்ச்சுரைஸர். இவை மூன்றும் மிகவும் அவசியம். எண்ணைப் பசை சருமம் கொண்டவர்கள் என்றால் மாய்ச்சுரைஸர் அவசியம் இல்லை. மற்ற சருமம் கொண்டவர்கள் மாய்ச்சுரைசருக்கு பிறகு, சன் ஸ்கிரீன், அதற்கு பிறகு பிரெஸ்ட் காம்பேக்ட் பவுடரை அதற்கான பஞ்சு கொண்டு பயன்படுத்த வேண்டும்.

ஒருவேளை முழுமையான மேக்கப் செய்துகொள்ளப் போகிறீர்கள் என்றால், கிளன்சிங், டோனிங், மாய்ச்சுரைஸர், சன் ஸ்க்ரீன் தொடர்ந்து மேக்கப் பிரைமர் பயன்படுத்த வேண்டும். தற்போது ஃபவுண்டேஷனுடன் இணைந்து காம்பேக்ட் பவுடர்கள் கிடைக்கின்றன. விசேஷங்கள், பார்ட்டிகளுக்கு இந்த இரண்டும் கலந்த காம்பினேஷனை பயன்படுத்தலாம். இல்லை என்றால், உங்க சரும நிறத்திற்கேற்ப ஃபவுண்டேஷன் பயன்படுத்திவிட்டு பின்னர் லூஸ் பவுடர் கொண்டு பிரஷால் டச்சப் செய்துகொள்ள வேண்டும்.

அதே போல் காம்பேக்ட் பவுடர்களை சரியான நிறத்தில் தேர்வு செய்யாவிட்டால் நேரம் செல்லச் செல்ல முகத்தை கிரே நிறத்தில் மாற்றிவிடும். இவை பல பிராண்டுகளில் ரூ.180 முதல் ரூ.3000க்கு மேல் வரை கிடைக்கிறது. அதில் தரமான பிராண்டுகளையே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் காம்பேக்ட் பவுடரை நேரடியாக முகத்தில் உபயோகிக்கக் கூடாது. இதை கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம்’’ என்றார் அழுத்தம் திருத்தமாக சிவ ஷீமா.

நலம் அளிக்கும் மூலிகைப் பொடிகள்!

மூலிகைகள் நமது உடலுக்கு பலவித நலன்களை ஏற்படுத்தி நோய்கள் வராமலும், வந்த நோய்கள் மறைந்து உடல் நலம் பெறவும் பயன்படுகின்றன. நமக்கு ஏற்படும் நோய்களுக்கு ஏற்ப அந்த வகை மூலிகைப் பொடியினை வாங்கி உட்கொண்டால் நோயிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழலாம்.

அறுகம்புல் பொடி: இது ரத்தத்தை சுத்தப்படுத்துவதாகும். உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும். 2-5 கிராம் அளவு எடுத்து தேன், தண்ணீர் கலந்து குடித்து வர வேண்டும்.

வல்லாரைப்பொடி: ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடலுக்கு வலிமை தரும்.

வில்வப்பொடி: குடல் புண், வாந்தி, மயக்கம் தீரும். இதை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்.

கடுக்காய்ப் பொடி: மலச்சிக்கல், பசியின்மை, வயிற்றுப் புண்கள் இவைகளை போக்க வல்லது.

துளசி பொடி: காய்ச்சலை போக்கி உடலின் வெப்பத்தை குறைக்கச் செய்யும். வெந்நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.

சுக்குப் பொடி: வாய்வு, நீர் ஏற்றம், பல்வலி, காது குத்தல், சுவாசக் கோளாறுகளை தீர்க்க உதவும். பசியை உண்டாக்க வல்லது. இதை தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள வேண்டும்.

மருதாணிப் பொடி:  நகப்புண், சுளுக்கு, கைகால்வலி, எரிச்சல், பித்த வெடிப்பு போன்றவற்றை நீக்கும். இதை தண்ணீரில் கலந்து பூச வேண்டும்.

மணத்தக்காளிப் பொடி: வாய்ப்புண், வயிற்றுப் புண், இருமல், இளைப்பு நோய்களை தீர்க்கும்.

காசினிக் கீரைப் பொடி: நீரிழிவு மற்றும் சிறு நீரக நோய்களை தீர்க்க வல்லது. வெந்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

கருவேப்பிலைப் பொடி: வாய் ருசியின்மை, வயிற்று இரைச்சல், பித்த காய்ச்சல் போக்கும்.

ரோஜாப்பூ பொடி: காய்ச்சல், தாகம் போக்கும். உடலை குளுமைப்படுத்தும். ரத்த சுத்தி ஆக்கும்.

தூதுவளைப் பொடி: இருமல், இளைப்பு இவைகளைப் போக்கும். உணவின் சுவையை அறிய வைக்கும்.

இந்த மூலிகைப் பொடி வகைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி, இரண்டு கிராம் முதல் ஐந்து கிராம் அளவு வரை தேன் அல்லது தண்ணீருடன் கலந்து உட்கொண்டால் அதற்குரிய உடல் உபாதைகள் நீங்கி, நலமுடன் வாழலாம். மூலிகைப் பொடிகளை உட் கொள்வோம், நலம் பல பெறுவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பட்ஜெட்டில் அடங்கும் க்யூரேடெட் உடைகள்!!! (மகளிர் பக்கம்)
Next post முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள்! (மருத்துவம்)