உள்ளுராட்சி அதிகார சபை சட்ட மூல வாக்கெடுப்பு மே 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு
உள்ளுராட்சி அதிகார சபை (விசேட அம்சம்) சட்ட மூலம் தொடர்பாக வாக்கெடுப்பின் மூலம் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லையை மத்திய அரசாங்கம் மே மாதம் 16 ஆம் திகதி வரை நீடித்துள்ளது. இந்தத் திகதி முன்னர் திங்கட்கிழமை (20) வரையே வழங்கப்பட்டிருந்தது. நாளை கிழக்கு மாகாண சபையில் விவாதத்துக் எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்த நிலையிலேயே இந்தத் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கிழக்கு மாகாண அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சற்று நேரத்துக்கு முன்னர் லங்கா ஈ நியூஸ{க்குத் தெரிவிக்கையில், இந்த கால நீடிப்புத் தொடர்பான அறிவிப்பு இன்று எமக்கு மத்திய அரசின் உயர் மட்டத்திலிருந்து கிடைத்தது. இதன்படி இந்தச் சட்ட மூலத்தை எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்க முடியும். இதன் காரணமாக நாளை (20) கிழக்கு மாகாண சபையில் மீண்டும் விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்த உள்ளுராட்சி அதிகார சபை (விசேட அம்சம்) சட்ட மூல விவகாரத்தை அன்றைய தினத்தில் எடுத்துக் கொள்வதில்லையென்றும் அதனை மே மாதம் 12 ஆம் திகதிக்கு விவாதத்துக்கு எடுத்து வாக்களிப்புக்கு விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார். இதேவேளை, இந்தச் சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உட்பட ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களில்; பெரும்பாலானோர் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளதனால் இவற்றில் சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண சபை உட்பட அனைத்து மாகாண சபைகளின் அங்கீகாரத்தின் பின்னர் அரசாங்கம் இதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சந்திரகாந்தன் சிவனேசதுரையும் (பிள்ளையான்) இந்தச் சட்ட மூலம் தொடர்பில் தனது அதிருப்தியைத் தெரிவிததமை குறிப்பிடத்தக்கது.
Average Rating