மோதல் நிறுத்தத்தால் பயனில்லை? -கோதபாய ராஜபக்ச
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களை வெளியேறவிடாமல் புலிகள் தடுத்து வருவதாகவும், அவர்கள்மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருவதாக கூறிவரும் ஐக்கிய நாடுகள் சபையும், பல சர்வதேச நாடுகளும், அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. மக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக மீண்டும் மோதல் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் இவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எனினும், மக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக தாம் அறிவித்த 48 மணிநேர மோதல் நிறுத்தக் காலத்தில் பெரியளவில் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய, இந்த நிலையில், மீண்டும் மோதல் நிறுத்தம் செய்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்று கூறியிருக்கிறார். “இந்தக் காலப்பகுதியில் 5,000 அல்லது 10,000 பொதுமக்களாயினும் அங்கிருந்து வெளியேறியிருந்தால், மீண்டும் மோதல் நிறத்தம் செய்து மேலும் மக்கள் அங்கிருந்து வெளியேற வகைசெய்யலாம். அப்படி நடக்காத நிலையில், மோதல் நிறுத்தம் செய்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை” என்று கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேனனுக்கும் விளக்கிக் கூறியிருப்பதாகக் கூறும் அவர், களநிலைமைகளைச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் அமெரிக்கா தொடர்ந்து மோதல் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா இவ்வாறு செயற்படுவதாகவும், இதற்காக தாம் எதுவும் செய்ய முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
Average Rating