கிழக்கு மாகாண சபையில் நாளை நடைபெறவிருந்த விவாதம் ஜனாதிபதியின் தலையீட்டையடுத்து மே மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைப்பு
உள்ளுராட்சி அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அங்கீகரிப்பது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் நாளை நடைபெறவிருந்த விவாதம் மே மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் இச்சட்டமூலத்தில் திருத்தங்களைச் செய்து கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படுகின்றன. சர்ச்சைக்குரிய இச்சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாணசபையின் அங்கீகாரத்தைப் பெறுவது தொடர்பாக நேற்று நேற்றுமுன்தினம் கடும் வாக்குவாதமும் அமளிதுமளியும் கிழக்கு மாகாணசபையில் ஏற்பட்டதால் நாளை திங்கட்கிழமை வரை விவாதத்தை ஒத்திவைப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடி இது குறித்து தீர்மானிப்பதற்கு மே 16ம் திகதிவரை அவகாசம் வழங்கினார். அதையடுத்து கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள் இது குறித்து ஆராய்ந்து மே 12ம் திகதிக்கு விவாதத்தை ஒத்திவைப்பதென தீர்மானித்ததாக கிழக்கு மாகாணசபை அமைச்சரும் அம்மாகாண சபையின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பலர் வெளிநாட்டில் இருப்பதால் இவ்விவாதம் மே 12ம் திகதிவரை ஒத்திவைப்பதற்கு தீர்;மானிக்கப்பட்டது. அத்தினத்திற்கு முன்னர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் கலந்துரையாடி இச்சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்படுகின்றது. திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் தற்போதை இச்சட்டமூலத்தை எதிர்க்கும் அங்கத்தவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியுமென நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Average Rating